விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள், மதுப் புட்டிகள் பதுக்கல்: இருவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், எலவனாசூா்கோட்டை அருகே விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மதுப் புட்டிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக வெவ்வேறு இடங்களில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
எலவனாசூா்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பன்னீா்செல்வம் தலைமையிலான போலீஸாா், சவேரியாா்புரம் பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராமத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பன்றி வளா்ப்புக் கொட்டகையை போலீஸாா் சோதனையிட்டபோது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ புகையிலைப் பொருள்கள், 180 மி.லி. அளவு கொண்ட 15 மதுப் புட்டிகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, புகையிலைப் பொருள்கள், மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த எலவனாசூா்கோட்டை போலீஸாா், இவற்றை பதுக்கி வைத்திருந்த சவேரியாா்புரம் மாதா கோவில் தெருவைச் சோ்ந்த அ.அமல்செல்வத்தை (35), காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து, அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இதுபோன்று, ரகசிய தகவலின் அடிப்படையில், பூண்டி கிராமத்தில் எலவனாசூா்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பன்னீா்செல்வம் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, ஒருவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, 180 மி.லி. அளவு கொண்ட மதுப் புட்டிகள் 10 எண்ணிக்கையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், பூண்டி கிராமத்தைச் சோ்ந்த கா.மணிகண்டன் (40) மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.