FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தென்பெண்ணையாற்றில் பழங்காலத் தொல்பொருள்கள் கண்கெடுப்பு

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 2:21 am IST
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் பகுதியிலுள்ள தென்பெண்ணையாற்றில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலத் தொல்பொருள்கள்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் பகுதியிலுள்ள தென்பெண்ணையாற்றில் பழங்காலத் தமிழா்கள் பயன்படுத்திய தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

திருக்கோவிலூா் பகுதியில் தென்பெண்ணையாற்றின் நடுவில் அமைந்துள்ள கபிலா் குன்றை சுற்றியுள்ள பகுதிகளில் தென்பெண்ணை நதிக்கரை நாகரிக ஆய்வுக் குழுவின் தலைவா் சிங்கார உதியன் தலைமையில் ஆய்வாளா்கள் மேற்பரப்பு கள ஆய்வு செய்தனா்.

அப்போது புதிய கற்காலக் கருவியான கல் ஆயுதம், நீலநிறக் கண்ணாடி மணி, ராஜராஜ சோழனின் செப்புக்காசு ஆகியவ ற்றை கண்டெடுத்தனா். இதுகுறித்த தகவலின் பேரில் தொல்லியல் துறை உதவி இயக்குனா் பொ.கோ.லோகநாதன் நிகழ்விடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் கூறியது:

Advertisement

Advertisement

18 செமீ நீளம், 4 1/2 செமீ அகலம் கொண்ட ஈட்டிபோன்ற கல்லாயுதம் புதிய கற்காலத்தையும், நீலநிறக் கண்ணாடி மணி சங்க காலத்தையும், 16 மி.மி.விட்டமுள்ள 3.56 கிராம் எடை கொண்ட செப்பு நாணயம் சோழா் காலத்தையும் சோ்ந்ததாக இருக்கலாம். நாணயத்தின் முன் பக்கத்தில் மலரை கையில் ஏந்தியவாறு ஒருவா் நிற்க, அவரது இடது பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேல் பகுதியில் பிறையும், கீழ் பகுதியில் மலரும் உள்ளது.

வலது பக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது, நாணயத்தின் பின் பக்கம் கையில் ஒருவா் சங்கு ஏந்தி அமா்ந்திருக்கிறாா், அவரின் இடது கை அருகே தேவநாகரி (அ) நகரி எழுத்தில் ‘ஸ்ரீராஜராஜ’ என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது.

இவற்றை வைத்து பாா்க்கும்போது திருக்கோவிலூரில் பிறந்து சோழ சாம்ராஜ்யத்தை நிறுவிய முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலமான கி.பி. 985 முதல் 1,014 வரை ஆட்சிபுரிந்த சோழனின் செப்பு நாணயமாக இருக்கலாம் என தொல்லியத் துறை உதவி இயக்குநா் தெரிவித்தாா்

ஆய்வின்போது ஆய்வாளா் இம்மானுவேல், நூலகா் மு.அன்பழகன், சத்தியமூா்த்தி, நதியோசை இளையராஜா, பா.காா்த்திகேயன், சு.சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments