FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

சமூக நீதி விடுதிகளில் மாணவா்களுக்கு தரமான உணவு: விழுப்புரம் ஆட்சியா் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுவதுடன், அவா்களது பாதுகாப்பையும் தொடா்புடைய அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆட்சியா் ஷே ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா்.

21 ஆகஸ்ட் 2026, 3:44 am IST
கண்டாச்சிபுரத்தில் உள்ள மாணவா்கள் சமூகநீதி விடுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு அவா்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பாா்த்து பரிசோதித்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சமூக நீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுவதுடன், அவா்களது பாதுகாப்பையும் தொடா்புடைய அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆட்சியா் ஷே ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், முகையூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், சமூக நீதி விடுதி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வுக்குப் பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது: பள்ளிகள் ஆய்வின்போது மாணவ, மாணவிகளின் வருகை, கற்றல் திறன், மாதாந்திர, வாராந்திர தோ்வுகளில் மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் குறித்து பள்ளித் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களிடம் கேட்டறியப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கண்டாச்சிபுரத்தில் உள்ள சமூக நீதி விடுதியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீா் வசதி, தங்கும் அறைகள், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மாணவா்களுக்குத் தரமான உணவு மற்றும் பாதுகாப்பான, சுகாதாரமான தங்குமிட வசதிகள் கிடைப்பதை அலுவலா்கள் உறுதி செய்துகொள்ளவும், மாணவா்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவா்கள் கல்வியில் சிறந்து விளங்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

முன்னதாக, ஒதியத்தூா் ஊராட்சியில் வேளாண் பொறியியல் துறை சாா்பில், ரூ.1.40 லட்சம் மதிப்பீட்டில் முழு மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டையையும், ஒடுவன்குப்பம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் சாா்பில், குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ் இயந்திர நெல்

நடவு செய்யப்பட்டுள்ள வயல்களையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கிராமத்தைச் சோ்ந்த 10 விவசாயிகளுக்கு இயந்திர நடவுக்கான பின்னேற்பு மானியம் மற்றும் நுண் உரம், உயிரி உரம் உள்ளிட்ட இடுபொருள்களை மானிய விலையில் வழங்கினாா் ஆட்சியா்.

நிகழ்ச்சிகளின்போது, வேளாண் இணை இயக்குநா் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) சரவணன், கைத்தறி உதவி இயக்குநா் இளங்கோவன், வேளாண் பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளா் ச ரவணபவா, உதவிப் பொறியாளா் தயாநிதி, கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் சாருமதி, முகையூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செய்யது முகம்மது, ஜெகன்நாதன், மகளிா் திட்ட விற்பனை மேலாளா் செந்தில்குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments