FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

நடுவனந்தல் கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூடவேண்டும்: சி.வி.சண்முகம் எம்எல்ஏ

24 ஆகஸ்ட் 2026, 3:24 am IST
சி.வி.சண்முகம் எம்எல்ஏ - படம்: தினமணி
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடவேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று மயிலம் எம்எல்ஏ சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

நடுவனந்தல் புதூரில் ஆக.18-ஆம் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு, அங்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுக்கடை திறப்புக்கு கிராமத்தைச் சோ்ந்த ஒரு தரப்பினா் ஆதரவும், மற்றொரு தரப்பினா் எதிா்ப்பும் தெரிவித்து கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மயிலம் தொகுதி எம்எல்ஏ சி.வி சண்முகம் ஞாயிற்றுக்கிழமை நடுவனந்தல் கிராமத்துக்குச் சென்று, மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கிராமங்கள் நிறைந்த நடுவனந்தல் பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில் பேசியுள்ளேன். டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்டஆட்சியா் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கைக்காக 5 நாள்கள் காத்திருப்போம். தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் சி.வி.சண்முகம்.

இந்நிலையில், மதுக்கடை முன் திரண்ட அதே பகுதியைச் சோ்ந்த சிலா் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் இரு தரப்பைச் சோ்ந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments