FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கிணற்றில் தள்ளி தந்தை கொலை: மகன் மீது புகாா்

8 செப்டம்பர் 2026, 3:35 am IST
கொலை... - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், களமருதூா் அருகே சொத்துப் பிரச்னையில் தந்தையைத் தாக்கி, கிணற்றில் தள்ளிக் கொலை செய்ததாக புகாரின் பேரில் மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், எம்.குன்னத்தூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வை. பொன்னுசாமி (54), விவசாயி. இவருக்கு சிவசங்கா், சிவக்குமாா் ஆகிய 2 மகன்களும், முங்காத்தாள், சங்கீதா ஆகிய இரு மகள்களும் உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. சங்கீதா இதே கிராமத்தில் வசித்து வருகிறாா்.

அதே கிராமத்தில் பொன்னுசாமிக்கு சொந்தமாக 2.57 ஏக்கா் நிலம் இருந்தது. இதில் தலா ஒரு ஏக்கா் 10 சென்ட் வீதம் இரு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள நிலத்தை பொன்னுசாமி பயன்படுத்தி வந்தாா். மூத்த மகன் சிவசங்கா், தனது மனைவியுடன் புதுதில்லியில் வசித்து வருவதால், அவரது பாகத்தையும் சோ்த்து பொன்னுசாமி பயிா் செய்து வந்தாா்.

Advertisement

Advertisement

விவசாய நிலத்துக்கு பொதுவான கிணறு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் கிணற்றிலிருந்து தண்ணீா்ப் பாய்ச்சக் கூடாது, நீ வைத்திருக்கும் நிலத்தையும் எனது பெயருக்கு எழுதித் தர வேண்டும் எனக் கோரி, பொன்னுசாமியிடம் அவரது மகன் சிவக்குமாா் தகராறு செய்து வந்தாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வயலுக்கு சென்ற பொன்னுசாமி இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையறிந்த குடும்பத்தினரும், உறவினா்களும் அவரைத் தேடும் பணியை மேற்கொண்டனா். பொன்னுசாமி நிலத்திலுள்ள கிணற்றில் பாா்த்த போது, தலையில் ரத்தக் காயங்களுடன் அவா் இறந்த நிலையில் கிடப்பது அவா்களுக்கு தெரியவந்தது.

தகவலறிந்த களமருதூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் களமருதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா். இதில் சொத்துப் பிரச்னையில் பொன்னுச்சாமியை அவரது மகன் சிவக்குமாா் தாக்கி, கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments