சினிமா அன்று! பருவ காலம் (1974)
இப்படத்திற்கான கதை-வசனத்தை பேராசிரியர் A.S. பிரகாசம் எழுதியிருப்பார்.
நடித்தவர்கள்: கமல்ஹாசன், ரோஜா ரமணி, ஸ்ரீகாந்த், நாகேஷ், சுருளிராஜன், சுதர்சன், பிரமீளா, எஸ்.வி. சுப்பையா மற்றும் பலர் நடித்திருப்பர். இசை – தேவராஜன், இவருக்கு உதவியாக ஆர்.கே. சேகர் (ஏ.ஆர். ரகுமானின் தந்தை). இப்படத்திற்கான கதை-வசனத்தை பேராசிரியர் A.S. பிரகாசம் எழுதியிருப்பார்.
‘ஆனந்த பவன்’ என்றொரு பங்களா விடுதியில் வேலை பார்ப்பவர்கள் பெரியசாமியும் (எஸ்.வி.சுப்பையா) அவரது மகள் சாந்தாவும். (ரோஜா ரமணி). பருவகாலம் (சீசன்) ஆரம்பித்துவிட்டால் ஆனந்த பவன் பங்களாவிற்கு பெரும் பணக்காரர்கள் வருவது வழக்கம். அப்படி பருவகாலம் ஆரம்பித்தவுடன் ஓவியர் ரவி (சுதர்சன்), வேட்டைக்காரன் ஜம்பு (சசிகுமார்), கொலைகார கங்காதரன் (ஸ்ரீகாந்த்), குதிரை பயிற்சியாளர் ஜானி (லியோ பிரபு) என்று ஒவ்வொருத்தராக சீசனை அனுபவிக்க வருகிறார்கள். இவர்களோடு பெண் விருந்தினராக கனகா (ப்ரமீளா) வருகிறார். கங்காதரன் தம்பியாக சந்திரன் என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். அந்த விடுதியில் சமையல் வேலை செய்யும் முருகனாக சுருளிராஜன் நடித்திருப்பார், இவருக்கு ஜோடி சச்சு.
பொதுவாக நட்சத்திர விடுதியில், விருந்தினர்கள் கூப்பிடும்போது அவர்களது அறைக்குச் சென்று வேண்டிய சேவைகளை செய்பவர்கள் ஆண்கள்தான். அவர்களுக்கு பெயர் ரூம் பாய்ஸ். ஆனால், இப்படத்தில் அந்த சேவைகளை ரூம் கேர்ள் சாந்தா செய்து வருவாள். அப்படியொரு சந்தர்ப்பத்தில், அன்றைய வேலைகளை முடித்துவிட்டு திரும்பும் போது, கற்பழிக்கப்படுகிறார், குழந்தையும் பிறக்கிறது. இந்தக் குழந்தைக்கு யார் தந்தை என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை.
Advertisement
1972ஆம் ஆண்டு வெளிவந்த ‘செம்பருத்தி’ என்ற மலையாள படத்தின் ரீமேக் தான், பருவகாலம் தமிழ்ப்படம். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வெளிவந்த இப்படத்தில் ரோஜா ரமணிதான் கதாநாயகியாக நடித்திருப்பார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக வேலை பார்த்த பேராசிரியர் A.S. பிரகாசம் எழுதிய கதை-வசனத்திற்கு புலவர் புலமைப்பித்தன் மற்றும் பூவை செங்குட்டுவன் பாடல்கள் எழுதியிருப்பார்கள். மலையாள திரைப்பட இசையமைப்பாளர் தேவராஜன் இசையமைத்திருப்பார்.
‘வெள்ளி ரதங்கள் அழகு மேகம்
செல்லும் வீதி சிவந்த வானம்
பாவை நெஞ்சில் இளமை ராகம்
பாட வந்தது பருவராகம்’
என்ற பாடல் சூப்பர் ஹிட் பாடலாகும். வணிக ரீதியாக மலையாளத்திலும் தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டான படம். தமிழில் சுமாராக வெற்றி பெற்ற படம்.
1970களில் தமிழ்த் திரைப்பட உலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் மற்றும் முத்துராமன் போன்ற கதாநாயகர்களை மையப்படுத்தியே கதை நகரும். ஆனால், இப்படத்தில் கதாநாயகியான சாந்தாவை சுற்றியே கதை நகரும். அந்தக் காலகட்டத்தில் பெண்ணை (கதாநாயகியை) மையமாக வைத்து வெளிவந்த மிகச் சில திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
இப்படத்தின் அரிய தகவல்கள்:
- இப்படத்தில் கதாநாயகியாக நடித்த ரோஜா ரமணியின் மகன்தான் பிரபல தெலுங்கு நடிகர் தருண். இவர் குழந்தை நட்சத்திரமாக மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் நடித்திருப்பார். கதாநாயகனக ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்திருப்பார்
- இப்படத்தில் நடித்த நடிகர் சசிகுமாரின் மகன்தன் விஜயசாரதி, இவர் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், இது தவிர ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
- ராஜேஷ் என்ற பாடகர் ‘சரணம் அய்யப்பா’ என்று தொடங்கும் பாடலை பாடியிருப்பார். இவர் தற்போது கோவையில் தொழில் செய்து வருகிறார். ஏராளமான தனிப்பாடல்கள் பாடியுள்ளார்.
- ரா.சுந்தர்ராமன்