இயக்குனர் பாலாவின் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் எதிர்ப்பார்ப்பு மிகுந்திருக்கும். மிகை நாடும் கலையான சினிமாவில் பாலாவின் பங்களிப்பு குரூர அழகியல் இன வகையைச் சார்ந்திருக்கும். எதார்த்த வாழ்க்கையின் ஒவ்வாமையும் வன்முறையும், மனித மனங்களின் வக்கிரத்தையும் அவரது படங்களில் காணலாம். அவரது திரை மனிதர்கள் அவர்களுக்கேயான உலகில் அசலாக எவ்வித வெளிப்பூச்சுமின்ற வலம் வருவார்கள்.
இந்நிலையில் தாரை தப்பட்டை படத்தைத் தொடர்ந்து, பாலாவின் இயக்கத்தில் நடிகை ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள நாச்சியார் திரைப்படம் அதிக கவனத்தையும் எதிர்ப்பார்ப்பையும் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா அதிரடியான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பாலா படத்துக்கே உரிய தீவிரத்தன்மையுடன் கூடிய வசனங்களும் ஜோதிகாவின் கதாபாத்திரமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. படப்பிடிப்பும் அதன் பின்னான பணிகளும் நிறைவடைந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தினத்தை அதிகாரபூர்வமாக பாலா தரப்பு வெளியிட்டுள்ளது.
நாச்சியார் பிப்ரவரி 16-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்த படக்குழுவினர் படத்தின் புதிய போஸ்டரையும் டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
EON ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் பாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘B ஸ்டுடியோஸ்’ மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இசை - இளையராஜா.
இயக்குநர் மணி ரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸில் ஆவிட் எடிட்டராகப் பணி புரிந்து, அண்மையில் இயக்குநர் சுதா கோங்கராவின் இறுதி சுற்று படத்தில் படத்தொகுப்பு செய்த சதீஷ் சூர்யா நாச்சியார் படத்துக்கு எடிட்டிங் செய்துள்ளார். இவர் ஸ்ரீகர் பிரசாத்திடம் உதவி படத்தொகுப்பாளராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.