`மின்சார கனவு', `கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `சர்வம் தாள மயம்'. இதில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மிருதங்க வித்வான் ஒருவரிடமிருந்து அவரது கலையை கற்றுக் கொள்ள விரும்புகின்ற ஒரு இளைஞனின் கதை இது. பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறான். எல்லா பிரச்சனைகளையும் தாண்டி அவனது நோக்கம் நிறைவேறியதா என்பதே படத்தின் ஒற்றை வரிக் கதை.
காஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற ஷூட்டிங் முடிவடைந்து, படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், சர்வம் தாள மயம் படமானது 31-வது டோக்யோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கிறது.
இச்செய்தியை ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.