''சாதி அரசியல் செய்பவர்களுக்கு சூர்யா மீது பயம் இருக்கத்தான் செய்யும்'' : சூர்யாவுக்கு வலுக்கும் ஆதரவு
ஜெய் பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி 20 நாட்களாகப் போகிறது. இன்னும் இந்தப் படத்தை சுற்றி எழுந்த சர்ச்சைகள் குறைந்த பாடில்லை. நடிகர் சூர்யா மீது ஒரு எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுதா கொங்காரவுடன் சூரரைப் போற்று படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சந்திரா தங்கராஜ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், நான் சந்தித்த மிக தன்மையான மனிதர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். ஒரு பகட்டு இருக்காது கர்வம் இருக்காது மிகப்பெரிய மாண்பாளர் அவர். "சூரரைப்போற்று" படப்பிடிப்பில் ஒரு நாள் ஒப்பனையாளர் ஒருவர் ஒரு சின்ன குழந்தைக்கு பணி நிமித்தமாக ஒரு தவறைச் செய்துவிட்டார். கொஞ்சம் விட்டிருந்தால் அது ஆபத்தில் முடிந்திருக்கும். பதட்டத்தில் சூர்யா, அந்த ஒப்பனையாளரிடம் "ஏங்க பார்த்து செய்யமாட்டிங்களா" என்று கொஞ்சம் உரத்த குரலில் சொல்லிவிட்டார். அந்த ஒப்பனையாளர், "ஐய்யோ கதாநாயகன் கோபமாகிவிட்டார் அவ்வளவுதான் வேலை போகப்போகிறது" என்று பயப்பட ஆரம்பித்து, எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருந்தார்.
Advertisement
ஆனால் அடுத்தநாள் சூர்யா சார் அவரை அழைத்து "சாரிங்க நேத்து கொஞ்சம் கடுமையா பேசிட்டேன். குழ்தைகள்கிட்ட வேலை செய்யுறப்ப கொஞ்சம் கவனமாக இருங்க" என்று சொன்னதும் அந்த ஒப்பனையாளருக்கு அழுகையே வந்துவிட்டது. தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு. தாயரிப்பாளரும் கதாநாயகனுமான அவர் தன்னை வேலையைவிட்டு அனுப்புவார் என்று பார்த்தால் தன்னிடம் மன்னிப்பு கேட்கிறாரே என்று உருகிப் போய்விட்டார்.
இதுதான் நடிகர் சூர்யா. எளிய மக்களிடம் அன்பு பாராட்டுபவர். துளியும் நிஜ வாழ்வில் பாவனை செய்யாதவர். தன் படத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்தை மீறியும் பண உதவி செய்பவர்.
எந்த பாசாங்கும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களோடு கைகோர்த்து நிற்பவரைப் பார்த்து சாதி அரசியல் நடத்துபவர்களுக்கு பயம் இருக்கத்தான் செய்யும். இன்னும் இன்னும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான சினிமாவை எடுங்கள் சூர்யா சார்.. மக்கள் உங்கள் பக்கம் நிற்கிறார்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.