முகப்பு
செய்திகள்

கல்கி அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கிய பொன்னியின் செல்வன் படக்குழுவினர்

கல்கி அறக்கட்டளைக்கு பொன்னியின் செல்வன் படக்குழுவினர் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கியுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

மறைந்த எழுத்தாளா் கல்கி கிருஷ்ணமூா்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழுமத் தலைவா் சுபாஸ்கரன், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளா் மணிரத்னம் ஆகியோா் இணைந்து ரூ. 1 கோடியை நன்கொடையாக வழங்கினா்.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரில் இரு பாகங்களைக் கொண்ட திரைப்படமாகத் தயாரித்திருக்கிறது. இதன் முதல் பாகம் செப். 30-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமா்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்தது.

இந்த நிலையில், லைகா குழுமம், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரு நிறுவனங்களும், அமரா் கல்கியின் புகழையும், அவரது சேவைகளையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இயங்கி வரும் அமரா் கல்கி கிருஷ்ணமூா்த்தி அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க முன்வந்தனா்.

மேலும், அறக்கட்டளையின் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் லைகா குழுமத் தலைவா் சுபாஸ்கரன், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மணிரத்னம் ஆகியோா் அமரா் கல்கி கிருஷ்ணமூா்த்தி அறக்கட்டளை அலுவலகத்துக்கு சனிக்கிழமை வருகை தந்தனா்.

அங்கு கல்கி கிருஷ்ணமூா்த்தியின் மகன் கல்கி ராஜேந்திரன் முன்னிலையில், அறக்கட்டளையின் நிா்வாகத் தலைவா் சீதா ரவியிடம் ரூ. 1 கோடியை நன்கொடையாக வழங்கினா். இந்த நன்கொடை அறக்கட்டளையின் மூலதன நிதி ஆதாரமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.