முகப்பு
செய்திகள்

‘ஓய்வெடுக்க முடிவு’: ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அமீர் கான்!

சிறிது காலம் ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளதாக பாலிவுட் நடிகர் அமீர் கான் கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 15 நவம்பர் 2022, 1:39 pm IST
பகிர்:

சிறிது காலம் ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளதாக பாலிவுட் நடிகர் அமீர் கான் கூறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அமீர் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லால் சிங் சத்தா. நாடு முழுவதும் வெளியான இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்து நிலவிய நிலையில், வசூல் ரீதியாக கடும் இழப்பை சந்தித்தது.

இதனால், அடுத்ததாக அமீர் கான் நடிக்கவிருந்த ‘சாம்பியன்ஸ்’ படத்தில் அவர் நடிக்கமாட்டார் என்று தகவல்கள் பரவி வந்தன.

Advertisement

Advertisement

இந்நிலையில், சாம்பியன்ஸ் படம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட அமீர் கான் பேசியதாவது:

“சாம்பியன்ஸ் படத்தின் கதை அற்புதமான, அழகான கதை. லால் சிங் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நான் நடிக்க இருந்தேன். ஆனால், தற்போது நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன்.

சாம்பியன்ஸ் சிறந்த படம் என்பதால் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளேன். சாம்பியன்ஸ் படத்தில் நடிக்க வேறு நடிகரை தேர்வு செய்யவுள்ளேன்.

நான் எனது அம்மா, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். இதற்காக படத்தில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன்.

நடிப்பில் மட்டுமே கடந்த 35 ஆண்டுகளாக கவனம் செலுத்தினேன். என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இது நியாயமாகாது என்று கருதுகிறேன். அவர்களுடன் நேரம் ஒதுக்க இதுவே சரியான தருணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.  

அடுத்த ஆண்டிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் நடிப்பதிலிருந்து ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன். எனது உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்கும் காலகட்டத்தில் நான் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.