நான் சந்தித்ததில் அசலான இயக்குநர் சந்தீப்: ரன்பீர் கபூர் பாராட்டு!
பிரபல நடிகர் ரன்பீர் கபூர் அனிமல் படத்தின் இயக்குநரை மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.
அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்தப்படம் தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த இயக்குநரின் அனிமல் படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இதில் ராஷ்மிகா 'கீதாஞ்சலி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரின் சொந்தத் தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - அமித் ராய். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: பீஸ்ட் படத்தை கிண்டல் செய்ததற்கு நெல்சனிடம் மன்னிப்பு கேட்கும் ரசிகர்கள்! காரணம் பிரதமர் மோடியா?
Advertisement
Advertisement
பிரபல சன்னி தியோலின் சகோதரான பாபி தியோல் படத்தின் வில்லனாக நடித்துள்ளார். சூர்யாவின் கங்குவா படத்திலும் பாபி தியோல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நேற்று நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ரன்பீர் கபூர் பேசியதாவது:
மீண்டும் சென்னையில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. நான் இங்கு ஷீட் செய்திருக்கிறேன். எனக்குச் சென்னை ரொம்பப் பிடிக்கும். இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே சந்தீப் இது ரீமேக் இல்லை இது ஒரிஜினல் ஆனால் மிக இண்டென்ஸான படம் என்றார். கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதாபாத்திரத்திற்குத் தயாராவார்கள் என்னைப் பொறுத்தவரை நான் இயக்குநரோடு அதிக நேரம் செலவிடுவேன். இயக்குநருக்கும் எனக்கும் உள்ள புரிதல்தான் படம் நன்றாக வரக் காரணம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் சந்தீப் மிக திறந்த மனதுடன் இருந்தார். அவரிடம் தெளிவான பார்வை இருந்தது. நான் சந்தித்ததில் மிக அசலான இயக்குநர்களில் ஒருவர்.
தாய்ப்பாசம் குறித்து நிறைய படம் வந்துள்ளது, ஆனால் தந்தைப்பாசம் பற்றி படம் அதிகம் வந்ததில்லை. எப்படி இந்தக்கதை? ஏன் இந்தக்கதை? என்று அவரிடம் கேட்டேன். ஒருவன் தான் பாசம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லை வரை செல்வான், அவனைக் கொண்டு செல்லும் அந்த புள்ளி எது? என்பதுதான் இந்தப்படம் என்றார். அதை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அனிமல் எப்போதும் தங்கள் உள்ளுணர்வுப்படி செயல்படும் இந்த ஹீரோவும் அப்படித்தான். படம் பார்க்கும் போது, இந்த டைட்டில் பொருத்தமானது என்பதை உணர்வீர்கள். இப்போது பான் இந்தியப் படங்கள் வந்து கலக்குவது மகிழ்ச்சி. இங்கு ஜவான் ஓடுகிறது, இந்தியில் ஜெயிலர் விக்ரம் ஓடுகிறது. மொத்தமாக நாங்கள் எண்டர்டெயின் செய்யத் தான் படம் எடுக்கிறோம் அதை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப்படத்தை டிசம்பர் 1 தியேட்டரில் பார்த்து ஆதரவு அளியுங்கள் நன்றி எனக் கூறினார்.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் டிச.1ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.