முகப்பு
செய்திகள்

மனம் கவர்ந்த வில்லன்... விருது மேடையில் நெகிழ்ந்த மாரிமுத்து!

மனைவியை அடிமையாக கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர் ஆதி குணசேகரன். ஆனால், சிறந்த வில்லனுக்காக விருதை மாரிமுத்து தனது மனைவியை அழைத்து அவரிடம் கொடுக்கச்சொன்னார். 

Updated On : 8 செப்டம்பர், 2023 at 4:21 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:42 PM

மனம் கவர்ந்த வில்லன் என்ற பிரிவில் நடிகர் மாரிமுத்துவுக்கு சன் தொலைக்காட்சி விருது அளிக்கப்பட்டது. அநேகமாக சினிமாத் துறையில் அவரின் பங்களிப்புக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாய் அது இருக்க வேண்டும்.

எதிர்நீச்சல் உள்பட இனியா, கயல், பிரியமான தோழி, சுந்தரி, வானத்தைப்போல போன்ற முன்னணி தொடர்களின் வில்லன் பாத்திரத்தில் நடித்தவர்களும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். ஆனால், அதில் எதிர்நீச்சல் ஆதி குணசேகரனுக்குத்தான் விருது கிடைத்தது. மக்கள் அதிக அளவில் குணசேகரன் பாத்திரத்திற்கு வாக்களித்திருந்ததால், மக்கள் மனம் கவர்ந்த வில்லன் விருது குணசேகரனுக்கு கிடைத்தது.

டாக்டர் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் வினய், இந்த விருதை மாரிமுத்துவுக்கு வழங்கினார். அப்போது மேடையில் அவர் பேசிய பேச்சு பலரை சிலிர்க்க வைத்தது.

எதிர்நீச்சல் சீரியலில், மனைவியை அடிமையாக கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர் ஆதி குணசேகரன். ஆனால், சிறந்த வில்லனுக்காக விருதை அவர் தனது மனைவியை அழைத்து அவரிடம் கொடுக்கச்சொன்னார். 

சீரியலில் மட்டும்தான் ஆணாதிக்க ஆண். ஆனால் நிஜத்தில் மனைவியை மதிக்கத்தெரிந்த மனிதர் எனப் பலர் மாரிமுத்துவை புகழ்ந்தனர். 

விருது வாங்கிய பிறகு பேசிய ''சன் குடும்பத்தில் சேர்ந்து 2 ஆண்டுகள் ஆகிறது. முன்பு ஒரு பழைய கதை இருக்கிறது. உண்மையில், 30 ஆண்டுகளுக்கு முன்பே சன் தொலைக்காட்சி குடும்பத்துடன் நான் இணைந்துவிட்டேன். பூமாலை விடியோ இதழில் நான் பணியாற்றினேன். டெலிவரி ஆளாக பணிபுரிந்தேன். 

கடும் பசியுடன் இருந்த யானைக்கு கரும்புக்கட்டு கிடைத்தது போன்று, பசியுடன் இருந்தவனுக்கு பிரியாணி கிடைத்ததைப் போன்று எனக்கு எதிர்நீச்சல் தொடர் கிடைத்தது. சினிமாக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு யாருமே சரியாக தீனி போடவில்லை. திருச்செல்வம்தான் சரியான தீனி போட்டார். 

வசனகர்த்தா ஸ்ரீவித்யா எழுத்தும் என்னை வியக்கவைக்கிறது. அவரை நடிகையாகத் தெரியும். ஆனால் எழுத்தாளராக கடுமையாக உழைக்கிறார். அவரின் உழைப்பு எழுத்துத்திறமை பெரும் அதிசயம். இந்த விருது எனக்கு கிடைத்ததற்கு என்னுடன் பணிபுரிந்த சக நடிகர்களும் காரணம். அத்தனை பேரின் ஒத்துழைப்பால் என்னுடைய நடிப்பை கச்சிதமாக கொடுக்க முடிந்தது. இறுதியாக திருச்செல்வத்துக்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடாகாது'' எனக் குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்து மேடையிலிருந்து இறங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.