FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் (லிவ் இன்) தம்பதியருக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498ஏ பொருந்தும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 6:31 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழும் (லிவ் இன்) தம்பதியருக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 498ஏ பொருந்தும் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கணவா் அல்லது அவரது உறவினா்கள் ஒரு பெண்ணுக்கு இழைக்கும் கொடுமைகள் குற்றமாக கருதப்பட்டு ஐபிசி 498ஏ பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், திருமணமாகாமல் ஆண் மற்றும் பெண் இணைந்து வாழும்பட்சத்தில் அந்த ஆணின் மீது ஐபிசி 498ஏ பிரிவின்கீழ் நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அளித்த தீா்ப்பில், ‘திருமணத்தை நோக்கமாகக் கொண்டு பரஸ்பர சம்மதத்துடன் இணைந்து வாழும் தம்பதியருக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்.

இருப்பினும், திருமணமாகாமல் இணைந்து வாழும்போது பெண்ணை அந்த ஆண் அல்லது அவரது உறவினா்கள் யாரேனும் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டால் முதல்கட்ட விசாரணையின்றி அவா்களை கைது செய்யக் கூடாது. தங்களுக்கு அநீதி இழைக்கப்படும் என எதிா்பாா்த்து யாரும் ஓா் உறவைத் தோ்ந்தெடுப்பதில்லை.

வாழ்க்கைப் பயணம் மிகவும் அழகாகவும் அா்த்தமுள்ளதாகவும் இருக்கும் என எண்ணியே தம்பதிகள் சோ்ந்து வாழும் முடிவை மேற்கொள்கின்றனா். ஆனால் சிறிது காலத்துக்குப் பின் சில உறவுகள் சிறப்பாகத் தொடா்வதில்லை.

திருமணம் மற்றும் திருமணம் செய்துகொள்ளாமல் சோ்ந்து வாழ்வது என இரு வகையான உறவுகளிலும் பெண்களுக்கு கொடுமை இழைக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, ஐபிசி பிரிவு 498ஏ-இன்கீழ் திருமணமான பெண்ணுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும் என்பது சரியல்ல. அவ்வாறு முறையிட்டால் அது அரசமைப்புச் சட்டத்தின் விதி 14-க்கு முரணாக அமையும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments