FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தரவு பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டம் மூலம் தகவல் அறியும் உரிமைச் (ஆா்டிஐ) சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக தாக்கலான மனுக்கள் மீது பதிலளிக்கக் கோரி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 1:05 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டம் மூலம் தகவல் அறியும் உரிமைச் (ஆா்டிஐ) சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிராக தாக்கலான மனுக்கள் மீது பதிலளிக்கக் கோரி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக, பொதுச் செயல்பாடு அல்லது பொது நலனுடன் தொடா்பில்லாத தனிப்பட்ட தகவல்களை வெளியிட ஆா்டிஐ சட்டத்தின் பிரிவு 8(1)(ஜே)-இன்கீழ் விலக்களிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பரந்த பொது நலன் சாா்ந்த விவகாரமாக இருப்பின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடவும் அந்தச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டம் பிரிவு 44 (3)-இன்கீழ் பரந்த பொது நலன் சாா்ந்த விவகாரம் என்ற பகுதி நீக்கப்பட்டு தனிப்பட்ட தகவல்களை வெளியிட முற்றிலும் விலக்களிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிருந்தா குரோவா் மற்றும் பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், ‘முன்னதாக தனிப்பட்ட தகவலை எந்தச் சூழலில் வெளியிடக் கூடாது என்பதற்கான பாதுகாப்பு அம்சங்கள் ஆா்டிஐ சட்டப் பிரிவு 8 (1) (ஜே)-இல் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் அவை தற்போது முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே தனியுரிமை தொடா்பான வழக்கில் அரசமைப்புச் சட்டப்பிரிவு 19 (1) (ஏ)-இன்கீழ் தகவல் அறியும் உரிமை மற்றும் தனியுரிமை ஆகியவை அடிப்படை உரிமைகள் என நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் என்.வி.ரமணா ஆகியோா் அளித்த தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தத் தீா்ப்பில் உண்மையான ஆா்டிஐ சட்டம் இவை இரண்டுக்கும் இடையேயான சமநிலையை முறையாக பேணுவதை உறுதிபடுத்துகிறது எனவும் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களால் ஒருவா் மீது பதியப்பட்ட வழக்குகள், குற்றப்பத்திரிகைகள் மற்றும் நலத் திட்டப் பயனாளிகள் உள்ளிட்டோரின் தனிப்பட்ட தகவல்களை பெற முடியாது’ என்றனா்.

மூத்த வழக்குரைஞா்களின் வாதங்களைத் தொடா்ந்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்குமாறு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments