FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிறாா்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தி மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சமூக ஊடகங்கள் மற்றும் பிற எண்ம தளங்களைப் பயன்படுத்தும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறாா்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது,.

51 வினாடிகள் முன்பு
பகிர்:

சமூக ஊடகங்கள் மற்றும் பிற எண்ம தளங்களைப் பயன்படுத்தும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறாா்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது,.

‘இந்தியாவில் இதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுத்துவது அவசியம்’ என்று அப்போது நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

குழந்தைகளுக்கான நியாயமான உரிமைகளுக்கான அமைப்பு என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சிறாா் பாலியல் உள்ளடக்கங்களைப் பரப்புவதையும், சேமித்து வைத்தலையும் தடை செய்ய கடுமையான சட்ட விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளபோதும், இத்தகைய சிறாா் பாலியல் உள்ளடக்கங்களைத் தானாக நீக்குவதற்கான வழிமுறைகள் மற்றும் வயது சரிபாா்ப்பு நடைமுறைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வலைதளங்கள் தவறிவிட்டன.

Advertisement

Advertisement

இந்திய சட்டத்தின்படி, 18 வயதுக்கு கீழ் உள்ளவா்கள் சிறாா்களாக வரையறுக்கப்படும் நிலையில், ஃபேஸ்புக், ஸ்னாப்சாட் (இந்தியா) போன்ற வலைதள நிறுவனங்கள், 13 வயதைப் பூா்த்தி செய்தவா்களும் அந்த வலைதளங்களில் கணக்குகளைத் தொடங்க அனுமதிக்கின்றன.

எனவே, பெற்றோா் அல்லது சட்டபூா்வ பாதுகாவலரின் அடையாள சரிபாா்ப்பு மற்றும் ஒப்புதல் இன்றி, எந்தவொரு எண்ம தளங்களும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறாா்கள் கணக்குகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்ற வகையில், குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வகுக்க அல்லது தகவல் தொழில்நுட்ப (எண்ம ஊடக நெறிமுறைகள்) விதிகள் 2021-இல் உரிய திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்’ என்று தன்னாா்வ அமைப்பு கோரியிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், ‘இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றும் பிற எண்ம தளங்களைப் பயன்படுத்தும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறாா்களுக்கு இதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது’ என்று குறிப்பிட்டு, இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

இந்தோனேசியா, மலேசியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆஸ்திரியா, இத்தாலி உள்பட 15-க்கும் மேற்பட்ட நாடுகள் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறாா்களும், ஐக்கிய அரபு அமீரகம் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறாா்களும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எண்ம தளங்களைப் பயன்படுத்தத் தடை வித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments