வேட்டையன்: டப்பிங் பணிகளை தொடங்கிய துஷாரா!
நடிகை துஷாரா விஜயன் வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இதன் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். பின்னர் நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்கன், அநீதி படங்களில் நடித்திருக்கிறார்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் துஷாரா, நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. ஆனால் துஷாரா கதாபாத்திரத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை துஷாரா வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கனவே இதன் டப்பிங் பணிகளை ஃபக்த் பாசில் முடித்ததும் குறிப்பிடத்தக்கது.
ராயனுக்குப் பிறகு நடிகை துஷாரா, நடிகர் விக்ரமுடன் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார்.