தங்கலான் படம் ரசிகர்களை ஏமாற்றாது! 100% உத்தரவாதம் அளித்த பார்வதி!
நடிகை பார்வதி தங்கலான் படம் பார்வையாளர்களை ஏமாற்றாதென கூறியுள்ளார்.
மலையாள நடிகை பார்வதி தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தனுஷுடன் மரியான் படத்தில் நடித்திருந்தார்.
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை பார்வதிக்கு டேக் ஆஃப் எனும் மலையாளப் படத்துக்கு தேசிய விருதும் கேரள அரசின் மாநில விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். பா. ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படம் ஆக.15ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Advertisement
நடிகை ஊர்வசியுடன் இணைந்து பார்வதி நடித்த உள்ளொழுக்கு திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் தங்கலான் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வதி பேசியதாவது:
பூ படத்தில்தான் நான் நடிகையாக அறிமுகமானேன். அதன் தயாரிப்பாளர்தான் இதற்கும் இருக்கிறார். பா. ரஞ்சித் படங்கள் எப்படி இருக்குமென தெரியும். மிகவும் எதார்த்தமாக எடுக்கக்கூடியவர். அதனால் படப்பிடிப்பில் சொகுசாக இருக்கமுடியாது. ஒவ்வொருவரும் சிறப்பாக வேலை செய்துள்ளார்கள்.
படம் நடிப்பதே ஒரு ஆசிர்வாதம்தான். அதற்காக பணமும் கிடைக்கிறது. ஆனால் அதைவிட அந்தப் படம் பார்த்து ரசிகர்கள் நீங்கள் ஆதரவு தெரிவிப்பதுதான் எல்லாவற்றை விடவும் பெரியது.
நடிகர் விக்ரம் சிறப்பாக நடித்துள்ளார். உங்களின் அன்புதான் எங்களை இவ்வளவு உழைக்க வைக்கிறது.
தங்கலான் படம் உங்களை (பார்வையாளர்களை) ஏமாற்றாது. இதற்கு நான் 100 சதவிகிதம் உத்தரவாதம் தருகிறேன் என்றார்.