2 காசோலைகளை தனுஷுக்கு பரிசளித்த கலாநிதி மாறன்!
ராயன் பட வெற்றிக்காக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனுஷுக்கு 2 காசோலைகளை வழங்கியுள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக உலகளவில் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம், சில சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. தனுஷ் நடித்த படங்களிலேயே இதுவே பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியுள்ளது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனுஷ் பத்திரிகையாளர்களுக்கு விருந்தளித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் இன்று (ஆக.23) வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ் சிறப்பாக நடித்திருப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான தனுஷுக்கு ராயன் படத்தின் வெற்றிக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இரண்டு காசோலைகளை வழங்கியுள்ளார்.
இதற்கு முன்பும் ஜெய்லர் படத்தின் வெற்றிக்கு காசோலை கார் என நடிகர் இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.