ஒரு வருடமாக கிராபிக்ஸ் பணிகள் செய்து வருகிறார்கள்: ஹனுமான் படக்குழு!
தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள ஹனுமான் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு மான்.
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் "அஞ்சனாத்ரி" என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க கிராபிக்ஸில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹனு-மான் உலகளவில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் கே. நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறார். ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார்.
இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை, விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் சென்னையில், தமிழ்ப் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர்.
இவ்விழாவில் இந்தப் படத்தினை வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது:
தயாரிப்பாளர் சைதன்யா மேடம் இந்நிகழ்ச்சிக்குக் கிளம்பும்போது செருப்பு அணியவில்லை, மொத்த படக்குழுவும் அப்படித்தான். ஹனுமான் மீதான அனைவரின் அர்ப்பணிப்பும் அங்கேயே தெரிகிறது. நான் கடந்த ஒரு வருடமாக இப்படத்தைக் கவனித்து வருகிறேன். படத்தை முடித்துவிட்டாலும், ஒரு வருடமாக கிராபிக்ஸ் பணிகள் செய்து வருகிறார்கள். உலகத்தரத்தில் இப்படைப்பினை உருவாக்கியுள்ளனர்.
இந்தப்படத்தை நான் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்த புது வருடத்தில் இப்படத்துடன் ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பொங்கலை ஹனுமானுடன் ரசிகர்கள் கொண்டாடலாம். பத்திரிக்கை நண்பர்கள் இந்தப்படத்திற்கும் எப்போதும் போல் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி எனக் கூறினார்.