துரோகம்: ஏஐ உதவியால் மாற்றப்பட்டு வெளியான அம்பிகாபதி படத்துக்கு இயக்குநர் எதிர்ப்பு!
தனுஷின் அம்பிகாபதி மறுவெளியீடு குறித்து புலம்பும் இயக்குநர்...
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான அம்பிகாபதி படத்தினை ஏஐ உதவியால் மாற்றி வெளியிட்டிருக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்து அந்தப் பட இயக்குநர் தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்.
ஹிந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கிய ராஞ்சனா (தமிழில் அம்பிகாபதி) கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் ஏஐ உதவியினால் மாற்றப்பட்டு இன்று (ஆக.1) வெளியாகியுள்ளது.
Advertisement
ரசிகர்கள் முதல் படக்குழு வரை இந்த மாற்றத்துக்கு அதிருப்தி தெரிவித்த நிலையில் படத்தினை இயக்கிய இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீண்ட பதிவினை எழுதியுள்ளார். அதில் அவர் பேசியதாவது:
அக்கறையின்றி மாற்றம்
கடந்த 3 வாரமாக நம்பமுடியாத, மிகவும் வருத்தங்கூடிய சம்பவங்கள் நடந்தன.
என்னுடைய சம்மதம் இல்லாமல் ராஞ்சனா எனும் படத்தை பொறுப்பில்லாமல் மாற்றி மறுவெளியிட்டுள்ளார்கள். இதில், கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் அக்கறையே இன்றி பொறுப்பில்லாமல் இதை செய்துள்ளார்கள்.
இந்த விஷயங்களுக்கு மத்தியில் திரைத்துறை, ரசிகர்களிடமிருந்து மிகுந்த ஆதரவும் கிடைத்தது ஆறுதலாக இருந்தது. இந்தப் படம் அவர்களுக்கு முக்கியமானது என்ற உண்மையை வெளிப்படுத்தியது. அதற்காக நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.
இது புகழலஞ்சலி கிடையாது
மீண்டும் இதை தெளிவுப்படுத்துகிறேன்: ஏஐ-ஆல் மாற்றியதை நான் ஆதரவிக்கவில்லை. அதில் எனக்கும் படத்தை உருவாக்கிய குழுவுக்கும் எந்தப் பங்குமில்லை.
இது வெறுமனே படம் கிடையாது. இது மனிதர்களின் கைகளில் உருவாக்கப்பட்டது. அதில் தவறுகள், மனித உணர்வுகள் அடங்கியிருக்கும்.
தற்போது வந்திருப்பது புகழ் அஞ்சலி கிடையாது. நோக்கம், ஆன்மாவுடன் உருவாகிய ஒன்றை அஜாக்கிரதையாக கைப்பற்றி மாற்றியுள்ளார்கள்.
புதுமையல்ல, அவமானம்
எங்களது ஐடியாவை ஒரு இயந்திரத்தால் மாற்றுவது புதுமை கிடையாது. அது ஆழ்ந்த அவமானம்.
எங்களது அனுமதி இல்லாமல் படத்தின் உணர்வலையின் மீது தொப்பியை வந்து போர்த்துவதுபோல செய்வது கலைப்படைப்பாக மாறாது. நாங்கள் உருவாக்கியதன் மீதான துரோகம் இது.
இந்தப் படத்துக்கு உயிர்கொடுத்த அனைவரது சார்பாக நான் பேசுகிறேன். தற்போது மாற்றப்பட்டு வெளியாகியிருக்கும் இந்தப் படம் நாம் யார் என்பதை மாற்றாது. நாங்கள் உருவாக்கிய படத்தின் உணர்வை இந்தப் படம் எடுத்துச்செல்லவில்லை எனக் கூறியுள்ளார்.