முகப்பு
செய்திகள்

75 வயதிலும் சூப்பர் ஸ்டார்... ரஜினியை இயக்கும் ஈகோ!

நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக இருப்பது குறித்து...

Updated On : 12 டிசம்பர், 2025 at 8:40 AM
நடிகர் ரஜினி ஜெயிலர் விழாவில், பழைய பட போஸ்டரில். - கோப்புப் படங்கள்.
பகிர்:
Updated On : 13 ஆகஸ்ட், 2025 at 4:16 PM

Ego to a rider on a horse (the id), attempting to guide and control the powerful, instinctual urges - Sigmund Freud

பள்ளிக் கூடங்களில் இருந்தே போதிக்கப்பட்டும் யாராலும் பின்பற்ற முடியாத ஒன்றுதான் இந்த ஈகோ. பலரும் நினைப்பது போல இந்த ‘ஈகோ’ அந்தளவுக்கு மோசமானதல்ல என்கிறார் மனோதத்துவ இயலின் தந்தை சிக்மண்ட் பிராய்ட்.

நனவிலி (unconscious mind) மனதை பிராய்ட் Id, Ego, super ego என மூன்றாகப் பிரிக்கிறார். இது அனைத்து மனிதர்களிடமும் இருப்பதுதான்.

Advertisement

ID- பசி, இன்பம், ஆக்ரோஷம் போன்ற ஆதி உணர்ச்சிகளைக் குறிக்கிறது.

Super Ego- சமூகத்தால் உண்டாக்கப்பட்ட நல்லனவற்றுக்காகப் போராடும் குணம் (சூப்பர் மேன் இங்கிருந்துதான் வருகிறார்).

Ego - இதுதான் எதார்த்த நிலையில் என்ன முடிவு எடுக்கலாம் என்பதை முடிவு செய்கிறது.

Id, super ego இடையேயான போராட்டத்தில் எதை வெளிக் கொணர்வது என்பதை இந்த ஈகோதான் முடிவு செய்கிறது. அதுதான் ஒரு மனிதனின் ஆளுமை - Personality -யையும் முடிவு செய்கிறது.

Updated On : 13 ஆகஸ்ட், 2025 at 4:39 PM

இதில் ரஜினியை இயக்குவது எது?

"எவ்வளவு பணம், புகழ் இருந்தாலும் வீட்டுக்குள் நிம்மதியும் வெளியே கௌரவமும் இல்லாவிட்டால் எந்தப் பயனும் இல்லை..." என்று கூலி இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசினார்.

ரஜினி எப்போதும் சமூகத்தில் தனக்கு என்று மரியாதையை எதிர்பார்ப்பவராகவே இருக்கிறார். அதுதான் அவரை 74 வயதிலும் உழைக்க வைக்கிறது. இல்லையெனில் அமிதாப் பச்சன் மாதிரி வயதுக்கு ஏற்ற படங்களில் நடித்து ஒதுங்கியிருக்கலாம். பல மேடைகளில் ரஜினி இது சம்பந்தமாகப் பேசியுள்ளார்.

* ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தன்னை அவமதித்தவர் முன்பாக விலை உயர்ந்த காரில் வந்து இறங்குதல்.

* கூலி இசை வெளியீட்டு விழாவில் தனது தந்தையை பிஆர்ஓ என கிண்டல் அடித்தது.

* 2 ரூபாய் டிப்ஸுகாக அழுதது... தனது வெற்றியை மீண்டும் மீண்டும் சொல்லிக்காட்டிக்கொண்டே இருப்பது.

Updated On : 13 ஆகஸ்ட், 2025 at 4:39 PM

பாபாவும் அரசியலும்...

படையப்பாவுக்குப் பிறகு ரஜினி பல வெற்றிகளைப் பார்த்து சலிப்படைந்து விட்டதால் சினிமாவை விட்டு விலகுவதாக நினைத்தார். அவரது குரு, “சினிமா எல்லோருக்கும் அமையாது என்றும் உனது கருத்துகளை நீ சினிமாவில் பிரசாரம் செய்யலாம்” எனக் கூறியதையும் சீரியஸாக எடுத்துக்கொள்கிறார். பின்னர், திடீரென ஏற்பட்ட ஆன்மிக உந்துதலால் பாபா குறித்து படம் எடுத்ததாகக் கூறினார்.

அரசியலில் இறங்குவதுதான் அவரது நோக்கமாக இருந்தது. இதற்கும் அதிமுகவினர், பாமகவினர் ஏற்படுத்திய அரசியல் நெருக்கடிகள் அவரது ஈகோவைச் சீண்டியிருக்கலாம். அதிகாரம் தனக்குப் பிடிக்கும் என அவரே பல மேடைகளில் கூறியுள்ளார். ஆனால், அது ஆன்மிகமாகவும் இருக்கலாம் என்கிறார்.

பாபா குறித்துத் தனக்கு ஏற்பட்ட ஆன்மிக அனுபவத்தைப் படமாக இயக்க நினைத்தார். ஆனால், அவரது நனவிலி மனது அவருக்குக்குள் இருக்கும் அரசியல் ஆசையை வெளிப்படுத்திவிட்டது (2002). அந்தப் படம் தோல்வி அடைந்த பிறகு சிறிது இடைவெளி விட்டு சந்திரமுகியில் மீண்டு வந்தார்.

கடைசியில் 2020-இல் அரசியலை அறிவித்துவிட்டு இரண்டே வாரங்களில் அதை நிறுத்தியும் விட்டார். அதற்குக் காரணம் உடல்நிலை எனக் கூறினார். உண்மையில் அவர் கடவுள் அதை விரும்பவில்லை என்ற ஒரு சிக்னலாகவே எடுத்துக் கொண்டதாகவும் கூறியிருந்தார். இதன் விளைவாகவே அவர் இயக்கிய பாபா படம் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு 2022-இல் வெளியானது.

Updated On : 13 ஆகஸ்ட், 2025 at 4:39 PM

ஈகோ என்பது பதற்றத்தின் உறைவிடம்

ஒருமுறை தனக்கு காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரைப் படத்தில் பயன்படுத்தியதற்கு ரஜினி கோபித்துக் கொண்டதாக சந்தானமே கூறியிருந்தார். சமீபத்தில் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்ற விவாதம் பேசுபொருளாக, ரஜினி மீண்டும் தனது இடத்தைத் தக்கவைக்க செய்ததாகக் கூறப்படும் விஷயங்கள் மிகவும் பேசுபொருளாயின. வயதானாலும் தன் இடத்தை விட்டுக் கொடுக்காத ரஜினி, "காக்கா" கதையைப் பேசினார்.

ego is the true abode of anxiety- Sigmund ஈகோ என்பது பதற்றத்தின் உறைவிடம் என பிராய்டு கூறியுள்ளார்.

நிகழ்காலத்தில் ரஜினியைவிட விஜய் அதிகம் சம்பாதிப்பது அனைவரைக்குமே தெரிந்த ஒன்றுதான்.‌ ஆனால், ரஜினியால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மீண்டும் தனக்கான இடத்தைப் பிடிக்க முயன்றதன் விளைவாக என் பேரைத் தூக்க நாலு பேரு எனும் பாடலை ஜெயிலர் படத்தில் வைத்தார் (விஜய் இந்தப் போட்டியில் இருந்து விலகியதால் ரஜினி unopposed ஆக இருக்கிறார்)

ரஜினி நாயகனாக நடிப்பதைவிட வில்லனாக நடித்தால் யாருமே அவருக்கு அருகில்கூட வர முடியாது. அந்தளவு நடிப்பார். உண்மையில் காந்தம் இருக்கிறது!

Updated On : 13 ஆகஸ்ட், 2025 at 4:39 PM

தேவை முடிந்தால் நிம்மதி

ஒரு முறை துரியோதனன் கதாபாத்திரம் ஏற்று நாடகம் நடித்தபோது அவரைப் பார்க்க 60-70 பேர் காத்திருந்த கதையைச் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இத்துடன் ஒருமுறை துரியோதனன் கதையை அவர் வேறு ஒரு நிகழ்வில் பேசியதை ஒப்பிட்டும் பார்க்க வேண்டும்.

ஆன்மிக புத்தக விழாவில்," கிருஷ்ணன் துரியோதனனிடம், எது நல்லது எது கெட்டது என்று சொல்வதற்குச் செல்வார். அப்போது துரியோதனன் 'இதெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால், அதைச் செய்ய முடியவில்லை. அதோ அர்ஜுனன் இருக்கிறான் பாரு. அவனிடம் போய்ச் சொல். அவனுக்குத் தான் ஒன்றுமே தெரியாது என்று அனுப்பி விடுவாராம். நாமெல்லாம் துரியோதனன் மாதிரிதானே..." என்று சிரிப்பார்.

நடிகர் ரஜினிக்கு சில விஷயங்களில் தன்னையே கூர்ந்து அவதானிக்கும் பழக்கம் இருக்கிறது. அவருக்கே தெரியும் அவரது ஈகோ குறித்து... ஈகோவை தனது வளர்ச்சிக்காகப் பயன்படுத்திய ரஜினி, அதிலிருந்து வெளிவர போராடி வருவதாகத் தோன்றுகிறது. அதுதான் அவரை ஆன்மிக பாதையில் இட்டுச் சென்றுள்ளது.

When ambition ends then only peace begins என்று ரஜினி ஒரு நிகழ்வில் பேசினார். உண்மையில் அவர் அந்த நிலையை அடைந்தால் படத்தில் நடிப்பதையே விட்டுவிடுவார் எனத் தோன்றுகிறது.

பிரபலமான தத்துவ அறிஞர் கார்ல் ஜுங்க் சொன்னதோடு இதை முடிக்கலாம்.

The first half focuses on building a strong and healthy ego, while the second half involves turning inward and letting go of the ego's limitations - நம்மை வளர்க்கும் ஆரோக்கியமான ஈகோவை முதலில் வளர்க்க வேண்டும். பின்னர், அதன் உள்புறமாக ஆழமாகச் சென்று அதனைக் கைவிட வேண்டும்!

இந்தத் திரையுலக பொன் விழா ஆண்டில், முதல் பாதியை மட்டுமே கடந்த ரஜினி இரண்டாம் பாதியில் இருக்கிறார்‌!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.