அரசன் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்! டி. ராஜேந்தர் குற்றச்சாட்டு!
நடிகர் டி. ராஜேந்தரின் பேச்சு வைரலாகியுள்ளது...
அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக டி. ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை, வி கிரியேஷன்ஸ் மூலம் கலைப்புலி எஸ். தாணு பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறுத்தப்பட்டதாக டி. ராஜேந்தர் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisement
அதில், “அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியிருக்கிறார்கள். நிறுத்தியது யார்? நிறுத்தச் சொன்னது யார்? நான் அரசனுக்காவோ அல்லது சிலம்பரசனுக்காகவோ வாதாட வரவில்லை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறம் தவறி நடந்துவிடக்கூடாது என்றே பேசுகிறேன். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என் மகன் சிலம்பரசனை வைத்து, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை எடுத்தபோது எழுந்த பிரச்னைகளுக்காக அவர் நீதிமன்றத்தை நாடினார். அங்கு, வழக்கு முடிக்கப்பட்டதுடன் தயாரிப்பாளரிடமிருந்து இரண்டாவது படத்திற்குப் பெறப்பட்ட முன்பணம் சிலம்பரசனையே சாரும் என தீர்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில், பழைய வழக்கை எடுத்துக்கொண்டு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் நலச் சம்மேளனமும் இணைந்து இன்று நடைபெற்றுக்கொண்டிருந்த அரசன் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர்.
ஒரு தயாரிப்பாளருக்காக, தயாரிப்பாளர் சங்கமே முன்னின்று படப்பிடிப்பை நிறுத்தியுள்ளது. இந்த தருணத்தில், இவ்விஷயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சிலம்பரசனுடன் நின்று உரிமையைப் பெற்றுத்தர வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன். மேலும், தேர்தல் நேரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் படப்பிடிப்பை நிறுத்திக் காட்டியிருக்கிறார்களே, இது நியாயமா? எனக் கேள்வியும் கேட்கிறேன்” எனக் கூறியுள்ளார். மேலும், டி. ராஜேந்தர் விரைவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இதுகுறித்து பேச உள்ளாராம்.
அண்மையில், நடைபெற்று முடிந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் லைகா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.