தெலுங்கு தொடரில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!
நடிகை சோனியா சுரேஷின் புதிய தொடர் குறித்து...
புதுவசந்தம் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை சோனியா சுரேஷ் புதிய தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார்.
நேரடியாகத் தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகவுள்ள இந்தத் தொடர், ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த பெண்ணை அடிப்படையாக வைத்து எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு புது வசந்தம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரின் நாயகியாக சோனியா சுரேஷ் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஷியாம் ஜி நடிக்கிறார்.
Advertisement
2023 முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில் நடித்து வருவதன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள சோனியா சுரேஷ், சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர்.
வசீகரமான தோற்றத்தாலும் குடும்பப்பாங்கான நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர், தெலுங்கில் உப்பென்னா என்ற தொடரிலும் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கில் புதிய தொடரில் நாயகியாக நடிக்கவுள்ளார். ஏ தேவி வரவோ நூவு எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர், ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த பெண்ணை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு உருவாகி வருகிறது. இத்தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.