சென்னையின் எப்ஸ்டீன்! யார் அந்த இசையமைப்பாளர்?
பாடகி ஸ்வாகதா கிருஷ்ணாவின் குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
பிரபல பாடகி ஸ்வாகதா கிருஷ்ணா இசையமைப்பாளர் ஒருவரின் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசியுள்ளார்.
பாடகி ஸ்வாகதா கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். பாடகியாக மட்டுமல்லாது இசையமைக்கவும், இசைக்குழுவை ஒருங்கிணைக்கவும் தெரிந்த கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் இவர் பாடிய, ‘ஆலாலிலோ’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை மாயா கிருஷ்ணா இவரது சகோதரி ஆவார். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவைவிட்டு விலகியிருந்த ஸ்வாகதா நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில், தற்போது ரிஷிகேஷில் சொந்தமாக தொழிலொன்றை நடத்தி வருவதைக் குறிப்பிட்டவர், தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்தும் பேசியுள்ளார்.
Advertisement
அந்த நேர்காணலில் ஸ்வாகதா, “நான் 7 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்தபோது மிகக் கொடுமையாக பாலியல் வன்கொடுமையை அனுபவித்தவள். அந்த சம்பவத்தால்தான் சென்னையைவிட்டே வெளியேறி ரிஷிகேஷ் வந்தேன். நான் பாதிக்கப்பட்டது, தமிழின் முக்கியமான இசையமைப்பாளரால்தான். அவரால் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டேன். எனக்கு நடந்தபோல் வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்கவே கூடாது. நான் 9 ஆண்டுகளாகக் காதலித்து வந்தவர் என்னைப் பிரிந்தபோது, நான் மன உளைச்சலில் இருந்தேன். அப்போது, ஆறுதலாக அந்த இசையமைப்பாளர் என்னுடன் நல்ல நட்பாக பழகி அவரின் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தினார். புதிய உறவுகள் கிடைத்ததும், நான் மெல்ல மெல்ல காதல் பிரிவு வலியிலிருந்து மீண்டேன்.
ஒருகட்டத்தில் அந்த இசையமைப்பாளர் எனக்கு சம்பளம் கொடுப்பதை நிறுத்தி, என்னிடமிருந்து செலவுகளுக்கு வாங்க ஆரம்பித்தார். நான் அவரின் ஸ்டுடியோவில் பணியாற்றியதால், பணம் எங்கே போகப்போகிறது? திரும்பித் தருவார் என பல லட்சங்களைக் கொடுத்திருக்கிறேன். ஒருநாள் அவரின் ஸ்டூடியோவில் வைத்து கட்டாயப்படுத்தி என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். என்னால் எதிர்த்து போராடவும் முடியவில்லை. அதனை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து, வெளியே சொன்னால் இந்த விடியோவை பலருக்கும் காட்டுவேன் என மிரட்டினார். அன்று எனக்கு நடந்ததை நினைத்தால் இப்போதும் நடுங்குகிறது. என்னை மட்டுமல்ல பல பெண்களையும் திடீரென தாக்கி வன்கொடுமை செய்து விடியோவாக எடுப்பார். அவரின் பிளாக்மெயில்களுக்கு அஞ்சியே பலரும் வெளியே சொல்லவில்லை.
இதைவிட அதிர்ச்சியானது, திரைப்படங்களுக்கு பாட வரும் குழந்தைகளை சிசிடிவி வழியாக தவறான நோக்கத்தில் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பார். அமெரிக்காவில் எப்ஸ்டீன் போல் சென்னையின் எப்ஸ்டீன் இவர்தான். அந்த இசையமைப்பாளரின் மனைவிக்கும் இதெல்லாம் தெரியும். அவரும் என்னிடம் இதுகுறித்து பேசியபோது தற்கொலை செய்யத் தோன்றுவதாகச் சொன்னார். நான் காவல் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களிடம் எனக்கு நடந்ததைச் சொல்லி அறிவுரை கேட்டேன். ஆனால், வழக்குப்பதிவு செய்ய தைரியம் இல்லை. காரணம், என்னைத்தான் பலரும் தவறாக பேசுவார்கள் என்கிற பயம் இருந்தது. இன்று வரை அந்த இசையமைப்பாளர் பல பெண்களைத் தன் வலையில் வீழ்த்தி பாலியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சீரழித்து வருகிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதையாக முறையாக வெளியிடுவேன்.” எனக் கூறியுள்ளார்
ஸ்வாகதாவின் இப்பேச்சு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் சமூக வலைதளங்களில் பெரிய அதிர்வைக் கிளப்பியுள்ளது. பலரும் அந்த இசையமைப்பாளர் யாரென கூறி வருகின்றனர். விரைவிலேயே, ஸ்வாகதாவே அந்த இசையமைப்பாளர் யாரென சொல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அந்த நேர்காணலில் தான் பண்யாற்றிய இசையமைப்பாளர்களான ஜிவி பிரகாஷ், அனிருத், ஜிப்ரான், இமான் ஆகியோர் மிக நல்ல உள்ளம் கொண்டவர்கள் என்பதையும் ஸ்வாகதா குறிப்பிட்டுள்ளார்.