கண்கலங்கிய ராம் கோபால் வர்மா... சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்த இயக்குநர் சிவா நிர்வாணா!
ராம் கோபால் வர்மா உடனான நினைவைப் பகிர்ந்த சிவா நிர்வாணா...
இருமுடி இயக்குநர் சிவா நிர்வாணா பகிர்ந்த அனுபவம் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கிய திரைப்படம் இருமுடி கட்டு. இந்தப் படத்தில் நடிகர் ரவி தேஜா நாயகனாகவும் நாயகியாக பிரியங்கா பவானி ஷங்கரும் நடித்திருந்தனர். தன் மகளைப் போன்ற பிற குழந்தைகளையும் நினைக்கும் நாயகன் பெண்களுக்கு எதிரான வன்முறையை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதாக திரைப்படத்தின் கதை உருவாகியிருந்தது.
வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய ஆதரவைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் சிவா நிர்வாணா, “நான் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சத்யா திரைப்படத்தைப் பார்த்த பின்புதான் இயக்குநராக வேண்டும் என முடிவெடுத்தேன். அப்போதிலிருந்து அவரின் பெரிய ரசிகன். எப்படியாவது, அவருடைய உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என ஆசைப்பட்டு அவர் இயக்கிக்கொண்டிருந்த ரக்த சரித்திரா (ரத்த சரித்திரம்) திரைப்பட படப்பிடிப்பிற்குப் போனேன். மிகப்பெரிய செட் அமைத்து காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. விவேக் ஓபராய் நடித்துக்கொண்டிருந்தார். நான் தயாரிப்பு மேலாளரிடம் சென்று நானும் பணியாற்றுகிறேன் என்றேன். ஆனால், முடியாது என மறுத்துவிட்டார். அந்த நேரம் பார்த்து, ராம் கோபால் வர்மாவின் கூலர் பாய் (படப்பிடிப்பில் வியர்க்காமல் இருக்க குளிரூட்டலைச் செய்யும் பணி) வந்து சம்பளம் தரவில்லை என மேலாளரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
நான் அந்த மேலாளரிடம் இவருக்கான சம்பளத்தை நானே கொடுக்கிறேன்; ஆனால், இவர் செய்யும் பணியை நாளையிலிருந்து நான்தான் செய்வேன் என வேலையை வாங்கிக்கொண்டேன். அன்றிருந்து அடுத்த 25 நாள்களுக்கு நான்தான் ராம் கோபால் வர்மாவின் கூலர் பாய். நாள் முழுக்க அவருக்கு அருகே இருந்து பார்த்துக்கொண்டிருப்பேன். என்ன காட்சிகளை எப்படி எடுக்கிறார் என்பதையும் குறிப்பெடுத்தபடி இருந்தேன். ஒருநாள் ஒரு சிறிய அறையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. எல்லாரையும் வெளியே போகச் சொன்னவர் என்னை மட்டும் உள்ளே இருக்கச் சொன்னார். அப்போது, அவர் எப்படி நெருக்கமான காட்சிகளை விவரிக்கிறார்; எடுக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன். ஆனால், அந்த நாள்களில் அவருக்கு என் பெயர் கூட தெரியாது.
ரக்த சரித்ரா வெளியாகி நான்கு ஆண்டுகள் கழித்தே எனக்கு இயக்குநர் வாய்ப்பு வந்தது. நான் இயக்கிய முதல்படமான நின்னுக்கோரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மாவிடம் உங்களின் உதவி இயக்குநர்தான் என் படத்தின் இயக்குநர் எனக் கூறியிருக்கிறார். என் பெயரைக் கேட்ட ராம் கோபால் வர்மா, அப்படி எந்த உதவி இயக்குநரும் என்னிடம் பணியாற்றவில்லை என மறுத்துவிட்டார். என் தயாரிப்பாளரிடம் நான் அங்கு என்ன வேலை செய்தேன் என்பதைச் சொல்லவில்லை.
சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்வில் ராம் கோபால் வர்மாவிடம் என்னை அறிமுகப்படுத்தியவர், ரவி தேஜாவின் இருமுடி திரைப்படத்தை இவர்தான் இயக்குகிறார் என்றார். என்னைப் பார்த்து ராம் கோபால் வர்மா அருகே அமரச் சொன்னதும், அவரிடம் அனைத்தையும் சொன்னேன். கூலர் பாயாக படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைபடத்தையும் காட்டினேன். இதனைக் கேட்டவர், மிகவும் எமோஷனலாகிவிட்டார். பின், அந்த நண்பரிடம் அவர் சொன்னார். “உதவி இயக்குநர்கள் வாய்ப்புகள் கிடைக்குமா என முட்டிமோதிப்பார்க்கிறார்கள். சிவாவுக்கும் அந்த நினைப்பு இருந்தது; கிடைத்த வேலையில் அதனை நிறைவேற்றியும்விட்டார். எனக்கே தெரியாமல்..” என்றார். இந்த நிகழ்வை இப்போதுதான் சொல்கிறேன்” எனக் கூறினார்.
இயக்குநர் சிவா நிர்வாணா பகிர்ந்த சுவாரஸ்யமான இந்த அனுபவத்தைப் பகிர்ந்த பலரும், கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தால் எந்த வாய்ப்பையும் விடக்கூடாது என்பதற்கு சிவா ஒரு உதாரணம் எனப் பாராட்டி வருகின்றனர்.
The experience shared by Irumudi director Shiva Nirvana is surprising.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.