நண்பருக்காக விஜய் சேதுபதி செய்த செயல்! குவியும் வாழ்த்து!
பிரஜினின் புதிய படத்தை தொடக்கிவைத்த நடிகர் விஜய் சேதுபதி!
பிக் பாஸ் பிரபலங்கள் பிரஜின் மற்றும் ஜனனி நடிக்கும் புதிய படத்தை நடிகர் விஜய் சேதுபதி தொடக்கி வைத்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை தொடரில் நடித்து பிரபலமானவர் பிரஜின் பத்மநாபன். இவர் இந்தத் தொடரில் நடித்து புகழ்பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
இவர் டிஸ்யூம், மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை, ஆண் தேவதை உள்ளிட்ட பல படங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையே, விஜய் தொலைக்காட்சியில் பிரஜின் நடித்த சின்னதம்பி தொடர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இவர் நடித்த அன்புடன் குஷி, வைதேவி காத்திருந்தாள் தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. முன்னதாக, இவர் யாஷிகா ஆனந்த் உடன் படிக்காத பக்கங்கள் படத்திலும் நடித்திருந்தார்.
இதனிடையே, அண்மையில் நிறைவடைந்த விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பிரஜின் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் நடிகர் பிரஜின் மற்றும் நடிகர் புகழ் நடிக்கும் புதிய திரைப்படம். ஊருக்கு ரெண்டு ஊதாரி. இந்தப் படத்தில் ஜனனி நாயகியாக நடிக்கிறார்.
நகைச்சுவை பாணியில் எடுக்கப்படும் இந்தப் படத்தை யோகேஸ்வரன் மைனர் இயக்குகிறார்.
மேலும் இந்தப் படத்தில் விக்ரம் விஜய், மைம்கோபி, தீபா, அபிதா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் தொடக்க விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு, படப்பூஜையை தொடக்கி வைத்தார்.
பெண் என்ற தொடரில் நடிக்கும்போது விஜய் சேதுபதி - பிரஜின் இருவரும் நண்பர்கள் என்பதால், தனது நண்பர் பிரஜினுக்காக நடிகர் விஜய் சேதுபதி படத்தின் முதல் காட்சியை கிளாப் அடித்து தொடக்கி வைத்தார்.
இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதுடன், நண்பருக்காக விஜய் சேதுபதி செய்த செயலுக்கு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.