இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. இரங்கல்!
இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது...
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.
இயக்குநர் இமயம் என திரையுலகினரால் அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜா புதன்கிழமை (ஜூன் 10) அதிகாலை உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
நீலாங்கரை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டதாவது:
“இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த பாரதிராஜா அழுத்தமான தடங்களை பதித்தவர். வேதம் புதிது, கருத்தம்மா, புதுமைப்பெண் உள்பட முற்போக்கான திரை ஆக்கங்களை தந்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா, கிராமிய மண்வாசனை மணத்தை திரையில் கொண்டுவந்தவர்.
தன்னுடைய இளம் வயதில் கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர். ஆழமான சமூக அக்கறையுடன் கூடிய திரைப்படங்களை தந்த அவரது மறைவு இந்திய திரையுலகிற்குப் பெரும் இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது இணையர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், குற்றாலத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.