ராமர், கிருஷ்ணரைப் பார்த்ததில்லை; மோடியை பார்க்கிறேன்! தெலுங்கு நடிகர்
தெலுங்கு நடிகர் தனிகெல்லா பரணியின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருவது குறித்து...
பகவான் ராமரையும், கிருஷ்ணரையும், விவேகானந்தரையும் பார்த்ததில்லை என்றும் அதற்கு பதிலாக அவர்களின் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பார்ப்பதாக தெலுங்கு நடிகர் தனிகெல்லா பரணி தெரிவித்துள்ளார்.
வாழும் காலத்தில் பிரதமர் மோடியை பார்ப்பதை பெரும் ஆசிர்வாதமாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்குத் திரையுலகில் நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருப்பவர் தனிகெல்லா பரணி.
Advertisement
தமிழில் 180, தோழா, கம்பீரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளா. தமிழில் வெளியாகும் தெலுங்கு டப்பிங் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இவர் நன்கு அறிமுகமானவர்.
இந்நிலையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் பரணி சந்தித்துள்ளார். ஆன்மிகத்தில் ஈடுபாடுடைய இவர், மோடியுடன் சில நிமிடங்கள் பேசியுள்ளார்.
பின்னர் பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரணி பகிர்ந்துள்ளதாவது:
"நான் ராமரைப் பார்த்ததில்லை; கிருஷ்ணனைப் பார்த்ததில்லை; ஆதி சங்கரரைப் பார்த்ததில்லை; விவேகானந்தரைப் பார்த்ததில்லை. சொல்லப் போனால், இப்போதும் நம்மால் அவர்களைக் காண இயலாது.
ஆனால், அவர்கள் அனைவரின் சாராம்சத்தையும் தன்னுள் கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை நான் கண்டிருக்கிறேன். அவருடன் செலவிட்ட நேரங்கள் மறக்க முடியாதவை. என் வாழ்வு பூரணமடைந்தது" என்று பரணி குறிப்பிட்டார். இவரின் இந்த பதிவு இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.