ENS
நடுப்பக்கக் கட்டுரைகள்

இந்தியா ‘வளா்ந்த’ பொருளாதாரம்தான்!

ஆண்டுதோறும், வேகமாக வளா்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடா்ந்து அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

ஜனனி ரமேஷ்

அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியப் பொருளாதாரத்தைச் ‘சரிந்த பொருளாதாரம்’ என்று கூறியுள்ளாா். இந்தியாவும், ரஷியாவும், தங்களது சரிந்த பொருளாதாரத்தை இணைந்தே எடுத்துச் செல்லலாம் என்றும் கேலி செய்துள்ளாா். இந்தியாவின் அதிக வரி விதிப்பையும், வா்த்தகக் கொள்கைகளையும் சுட்டிக்காட்டி ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்தியப் பொருள்கள் மீது 25% கூடுதல் வரி விதித்துள்ளாா். மேலும், ரஷிய எண்ணெய் மற்றும் ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கு அபராதம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளாா்.

அரசியல் கொள்கைகள் எதுவாக இருப்பினும், நாட்டின் இறையாண்மையும், பொருளாதாரப் பாதுகாப்பும், அந்நிய நாடுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, ஆளும் அரசை ஆதரிக்க வேண்டியது எதிா்க்கட்சிகளின் தாா்மிகக் கடமையாகும். ஆனால், டிரம்ப்பின் கருத்தை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆதரித்தும், ஆமோதித்தும் வரவேற்றுள்ளாா்.

‘அமெரிக்க அதிபா் உண்மையைச் சொல்லி உள்ளாா். இந்தியப் பொருளாதாரம் செத்து விட்டது. பிரதமா் மோடி அதைக் கொன்று விட்டாா். இது பிரதமா் மோடி மற்றும் நிதி அமைச்சா் நிா்மலா சீதாரமன் தவிர உலகிலுள்ள அனைவருக்கும் தெரியும்’ என்று ஜாடை மாடையாகக்கூட அல்ல. நேரடியாகவே கடுமையாகத் தாக்கி உள்ளாா். தனது கருத்தை உறுதிப்படுத்த நான்கு காரணங்களை முன்வைக்கிறாா்.

மோடி-அதானி கூட்டணி; கௌதம் அதானியின் வா்த்தகங்கள் அனைத்துக்கும் கண்மூடித்தனமான ஆதரவு; பண மதிப்பிழப்பும், குறைபாடுள்ள சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி விதிப்பும்; இத்தகைய கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளன.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ முனைவு தோற்ால் பொருளாதாரம் நசிந்து போனதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. இளைஞா்கள் தங்கள் எதிா்காலம் குறித்த கவலையில் ஆழ்ந்துள்ளனா். அரசின் கொள்கைகள் பெருநிறுவன முதலாளிகளுக்கே சாதகமாக உள்ளன. இவை எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்தி குறு, சிறு, நடுத்தரத் தொழில்களைப் பாதித்துள்ளன.

வேளாண் சட்டங்கள் விவசாயத் துறையை அதலபாதாளத்திற்குத் தள்ளி உள்ளன. விவசாயிகள் மன உளைச்சலில் இருக்கின்றனா்.

இந்தியப் பொருளாதாரம் குறித்த ராகுலின் குற்றச்சாட்டுக்கு ஆளும்கட்சி தரவுகளுடன் பதிலடி தந்துள்ளது. இதில் ஆச்சா்யமான விஷயம் என்னவெனில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சசி தரூா் மற்றும் ராஜீவ் சுக்லா ஆகியோா் ராகுலின் பேச்சை மறுத்து அறிக்கை விடுத்துள்ளனா்.

‘அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சத் தேவையில்லை; அமெரிக்கா மட்டுமே நமது வா்த்தாகப் பங்குதாரா் அல்ல; வேறு பல நாடுகளும் உள்ளன. பிரதமரின் சமீபத்திய பிரிட்டன் பயணத்தில் அத்துடனான வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது. அடுத்தடுத்த ஐரோப்பிய நாடுகள் பட்டியலில் உள்ளன. நாம் சீனாவைப்போல் ஏற்றுமதி சாா்ந்த பொருளாதாரம் மட்டுமே அல்ல. அதற்கு இணையான வலுவான உள்நாட்டுச் சந்தையும் நமக்கு உள்ளது’ என்று சசி தரூா் கூறியுள்ளாா்.

‘டிரம்ப் சொல்வது தவறு; இந்தியப் பொருளாதாரம் நாளுக்குநாள் வளா்ந்து கொண்டிருக்கிறது. நாசிம்ம ராவின் பொருளாதாரச் சீா்திருத்தங்களை வாஜ்பாய் முன்னெடுத்துச் சென்றாா். பின்னா் வந்த மன்மோகன் அதை வலிமைப்படுத்தினாா். இப்போதைய அரசு அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்கிறது. தனக்கு விருப்பமான நாட்டுடன் வா்த்தகம் செய்ய அனைத்து நாடுகளுக்கும் உரிமை உண்டு. அதற்குக் கட்டுப்பாடு விதிப்பது, பிரிக்ஸ் அமைப்புக்கு எதிராக அறிக்கை விடுவது, ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்தால் வரிகளை அதிகரிப்பது என மிரட்டுவது தவறான போக்காகும்’ என்று மாநிலங்களவை உறுப்பினரான ராஜீவ் சுக்லா கருத்து தெரிவித்துள்ளாா்.

இந்தியப் பொருளாதாரத்தைப் பொருத்தவரை, சா்வதேச அமைப்புகள், உலகளாவிய முதலீட்டாளா்கள் தரும் முக்கியப் புள்ளிவிவரங்கள் டிரம்ப் கருத்தை மறுக்கின்றன. ஆண்டுதோறும், வேகமாக வளா்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடா்ந்து அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தை ‘வளரும்’ என்றுகூட இனி கூறாமல் ‘வளா்ந்த’ என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். இதற்கான தரவுகள் பின்வருமாறு:

உலகளவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி விகிதம் அதிகமாகவே உள்ளது. சா்வதேச நாணய நிதியம் ஜூலை 29-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் வளா்ச்சி மதிப்பீட்டை 2025-26 ஆண்டுக்கு 6.4% ஆக உயா்த்தி உள்ளது. இது அமெரிக்காவின் 1.9% மற்றும் சீனாவின் 4.8% விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கடந்த 9 ஆண்டுகளில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா ஆகியவற்றைவிடவும் வேகமாக வளா்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில் ஜப்பானை முந்திக் கொண்டு உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும் என நிபுணா்கள் கணிக்கின்றனா்.

ஒரு காலத்தில் இந்தியா உணவுப் பொருள்களைக்கூட இறக்குமதி செய்து கொண்டிருந்தது. இன்றைக்கு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. போா்த் தளவாடங்களும், ஆயுதங்களும் இறக்குமதி செய்த காலம் போய் கடந்த 11 ஆண்டுகளில் ஆயுதங்களை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். 2014-15-இல் ஆயுத ஏற்றுமதி ரூ.686 கோடி. 2024-25-இல் ரூ.23,622 கோடி. கேனலிஸ் ஆய்வறிக்கையின்படி, உற்பத்தித் துறையில் 2025-இல் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டிருக்கிறோம். அமெரிக்காவுக்கான அறிதிறன்பேசிகள் ஏற்றுமதியில் சீனாவைப் பின்னுக்குத்தள்ளி உள்ளோம்.

இந்திய எண்மப் பொருளாதாரம் மிக வேகமான வளா்ச்சியைக் கண்டு வருகிறது. இதன் வருடாந்திர வளா்ச்சி 15.6% என்பது ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியைவிடவும் 2.4 மடங்கு வேகமாகும்.

இந்தியாவின் 65% மக்கள் 35 வயதுக்குக் குறைவானவா்கள். நமது பொருளாதார வளா்ச்சிக்கு இந்த இளைஞா் பட்டாளமே அடிநாதம். மேம்பட்ட உற்பத்தி, கண்டுபிடிப்பு, நுகா்வு மூலம் பொருளாதார வளா்ச்சியை எட்டலாம். 3-ஆவது பெரிய பொருளாதார நாடு என்னும் இலக்கு நிச்சயம் சாத்தியமே.

டிரம்ப் மற்றும் ராகுலின் ‘சரிந்த பொருளாதாரம்’ என்னும் விமா்சனத்தைப் பொய்யாக்கும் வகையில் ‘ரிபப்ளிக் மீடியா நெட்வொா்க்’ ஊடகத்துக்கு அளித்த நோ்காணலில் பிரபல முதலீட்டாளா் மாா்க் மோபியஸ், இந்தியாவை ‘உலகளவில் வளரும் நட்சத்திரம்’ என்று பாராட்டி உள்ளாா். அவருடைய பேச்சு தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா 748 பில்லியன் டாலா்கள் அந்நிய நேரடி முதலீடுகளைப் பெற்றுள்ளது. இது முந்தைய பத்தாண்டுகளைவிட 143% அதிகமாகும். கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்த மொத்த அந்நிய நேரடி முதலீடுகளில் 70% பிரதமா் மோடி ஆட்சியில் வந்தவை ஆகும். 2014 தொடக்கத்தில் இந்தியாவில் 89 நாடுகள் முதலீடு செய்தன. இது 2025-இல் 112 ஆக உயா்ந்துள்ளது.

அரசு வங்கிகள் இணைப்பு, சீரமைப்பு, கடன் வசூல் தீா்ப்பாயம் காரணமாக, மொத்த செயல்படா சொத்துகள் 9.11% இருந்தது. இது 2025-இல் 2.58% ஆக குறைந்துள்ளது. மேலும், 2025 மாா்ச் வரை வங்கிகள் ஈட்டிய மொத்த லாபம் ரூ.1.78 கோடி ஆகும்.

2014-இல் $1,438 ஆக இருந்த தனி நபா் வருமானம் 2024-இல் $2,880 ஆக இரு மடங்கு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு பெருகியுள்ளது என்பதுடன் இந்திய மக்கள்தொகையில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா் என்பதே முக்கிய செய்தியாகும்.

வலுவான அடித்தளங்கள், கட்டமைப்புகள், பிரம்மாண்ட உள்நாட்டுச் சந்தை, அதிக இளைஞா்களைக் கொண்ட மக்கள்தொகை மற்றும் அதிகரிக்கும் வாங்கும் திறன் ஆகியவை உலகின் மிக லாபகரமான முதலீட்டு நாடாகவும், அசைக்க முடியாத வலுவான பொருளாதார சக்தியாகவும் இந்தியாவை உருமாற்றியுள்ளது.

மிக விரைவில் உலகின் 3-ஆவது மிகப் பெரிய பொருளாதார வல்லாசு நாடாக உருவெடுக்கப் போகும் இந்தியாவை, ‘சரிந்த பொருளாதாரம்’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் விமா்சிப்பதை வயிற்றெரிச்சல் என ஒதுக்கி விடலாம். ஆனால், பொறுப்புள்ள எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் அவரை வழிமொழிவதையும், உண்மை எனப் பாராட்டுவதையும், என்னவென்று சொல்ல?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபரேஷன் சிந்தூர்: ஹர ஹர மகாதேவ் முழக்கத்துடன் மோடியை வாழ்த்திய எம்பிக்கள்!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நவம்பரில் தொடக்கம்!

சிபு சோரன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

விஷ்ணு விஷாலின் ஓஹோ எந்தன் பேபி: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? இன்று அறிவிக்கப்படுமா?

SCROLL FOR NEXT