முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

வில் வித்தையின் சாதனைச் சிறுமி

7 வயதில் கராத்தே, யோகா, வில்வித்தை கற்க ஆரம்பித்து தற்போது மாநில அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெற்று சாதனை மாணவியாகத் திகழ்கிறார் சிறுமி எஸ்.தேஷ்னா. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:44 PM
வில் வித்தையின் சாதனைச் சிறுமி எஸ்.தேஷ்னா. 
பகிர்:

பெண் கல்வி, பெண்களின் வளர்ச்சி என்று பல தலைவர்கள் குரல் கொடுத்து வந்ததன் பலனாக இன்று பெண்கள் கல்வி கற்றதுடன் பல துறைகளில் ஆண்களுக்கு நிகராகவும், அதற்கு மேலாகவும் சாதனை படைத்து வருகின்றனர். 

இந்த நவீன காலத்தில் பல்துறை வாய்ப்புகளைப் பயன்படுத்தி பெண் குழந்தைகளும் கல்வியுடன் பல கலைகளையும் கற்று சாதனை புரிந்து வருகின்றனர். 

அந்தவகையில், 7 வயதில் கராத்தே, யோகா, வில்வித்தை கற்க ஆரம்பித்து தற்போது மாநில அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெற்று சாதனை மாணவியாகத் திகழ்கிறார் சிறுமி எஸ்.தேஷ்னா. 

Advertisement

கூத்தாநல்லூரில் யமுனா-சரவணா ஆகியோரின் மகளான சிறுமி எஸ்.தேஷ்னா, 6 ஆம் வகுப்பு படிக்கிறார். இவர், துர்காலயா சாலையிலில் உள்ள டி டைகர்ஸ் ஸ்போர்ட்ஸ் மற்றும் மார்ஷியல் ஆர்ட் அகாதமியில், 7 வயதில் இணைந்துள்ளார். கராத்தே, யோகா, வில்வித்தை போன்ற கலைகளை, பயிற்சியாளர் குணசேகரன் மூலம் பயின்றார்.

தொடர்ந்து, தேஷ்னா, 6 யோகாப் போட்டிகள், 10 கராத்தே போட்டிகள் மற்றும் 3 வில் வித்தை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2021 அக்டோபர் 10 ஆம் தேதி சென்னை, வேலம்மாள் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞர்கள் கலந்துகொண்ட வில்வித்தைப் போட்டியில், 14 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் போட்டியிட்டு, வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். சென்னை தெற்கு காவல்துறை இணை ஆணையர் ராஜேஸ்வரி பதக்கம் வழங்கினார்.

வில்வித்தைப் போட்டியில் வெற்றி பெற்ற தேஷ்னாவை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்து பாராட்டி, நினைவுப் பரிசும் வழங்கியுள்ளார். 

முதல்வரிடம் பாராட்டு பெற்ற மாணவி தேஷ்னா

செப்டம்பர் 11 ஆம் தேதி, காரைக்கால் ஆர்ட் அகாதமி சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசனம் போட்டியில், வெண்கலம் பதக்கத்தையும் வென்றார். அடுத்து, திருவாரூர் டி டைகர்ஸ் மார்ஷியல் ஆர்ட் அகாதமி நடத்திய கராத்தே கலர் பெல்ட் தேர்வில், சிறந்த நுணுக்கங்களை செய்து காட்டி, சிறந்த மாணவியாக தேர்ந்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரை சர்வதேச மற்றும் அகில இந்திய கராத்தே சங்கத் தலைவர் கியோஷி ஜெ.பி.சிவபாலன் வாழ்த்தினார்.

தொடர்ந்து, ஆகஸ்ட் 14 ஆம் தேதி தஞ்சாவூரில் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில், இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். தொடர்ந்து, சாதனைகள் படைத்து வரும், சிறுமி தேஷ்னா மற்றும் பயிற்சியாளர் குணசேகரன் ஆகியோரை அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments