முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

தொழிலொன்றைக் கற்றுக்கொண்டால் தற்சார்பு சாத்தியம்!

பிறவியில் அல்லது இடைப்பட்ட காலத்தில் உடலில் குறைப்பட நேர்ந்தாலும் தொழிலொன்றைக் கற்றுக் கொண்டால் தற்சார்புடன் வாழலாம்...

Updated On : 2 டிசம்பர் 2022, 8:18 pm IST
பகிர்:

உலகில் பல்வேறு காரணங்களால் பிறவியிலேயோ, இடைப்பட்ட காலத்திலேயோ மாற்றுத்திறன் கொண்டவர்களாகி வாழ்ந்து வருகிறார்கள் எண்ணற்றவர்கள். இவர்களில் ஒருவர்தான், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரைச் சேர்ந்த செல்வம் (38).

இவருக்கு மூன்றரை வயதாக இருக்கும்போது, இளம்பிள்ளை வாதம் ஏற்பட்டுள்ளது. சரியான மருத்துவ சிகிச்சை வழங்கப்படாததால், செல்வத்தின் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. மரம் ஏறும் தொழிலைக் கவனித்த தந்தையின் உதவியால், செயல்படாத அந்தக் கால்களுடன், பள்ளிப் படிப்பை முடித்தார்.
தொடர்ந்து, கூத்தாநல்லூரிலேயே மிக்ஸி, கிரைண்டர், காற்றாடி உள்ளிட்டவைகளைப் பழுது பார்க்கும் பயிற்சியைக் கற்றுக் கொண்டார். அதன் பிறகு, கொரடாச்சேரி பிரதான சாலையில், மெக்கானிக் கடையொன்றை வைத்துள்ளார். 

மாற்றுத் திறனாளியைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற உறுதியுடன், இவரைக் கரம் பிடித்துள்ளார்  இவரது மனைவி ரம்யா . இவர்களுக்கு இரண்டரை மற்றும் மூன்றரை வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான  செல்வம், தான் நடக்க முடியாதவன், தான் ஒரு மாற்றுத்திறனாளி என ஒருபோதும் நினைக்காமலேயே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

இந்தப் பகுதியில் சிறந்த மெக்கானிக் என்ற பெயரைப் பெற்றுள்ள இவர், மிக்சி, கிரைண்டர், காற்றாடி உள்ளிட்டவற்றைப் பழுது நீக்கம் செய்வதில் தன்  குடும்பத்திற்கு போதுமான வருமானம் கிடைப்பதாகவும்  குறிப்பிடுகிறார்.

உடலில் குறையேற்பட்டுவிட்டது என்பதற்காக எந்த நிலையிலும் மனம் தளர்ந்துவிடாமல் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொண்டு, நேர்மையான உழைப்பினால், தற்சார்பு நிலையை எட்ட முயலுவதன் மூலம் தன்மதிப்பு  குலையாமல் காப்பாற்றிக் கொள்வதுடன் மற்றவர்களையும் காப்பாற்ற முடியும் என்கிறார் செல்வம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.