வேகமெடுக்கும் மனநலப் படிப்புகள்! மாணவர்கள் மறக்காமல் செய்ய வேண்டியது?
தமிழ்நாட்டில் மனநலப் படிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்கள் கவனமாக தெரிவு செய்வது அவசியம் என்பது பற்றி..
கரோனா காலத்துக்குப் பிறகு, மன நலன் குறித்து மக்கள் அதிகம் அறியத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால், நாடு முழுவதும் பல கல்வி நிலையங்கள் ஆன்லைன் மற்றும் தொலைநிலைக் கல்வி முறைகளில்கூட மனநலன் சார்ந்த படிப்புகளை வழங்கத் தொடங்கிவிட்டன.
சைகாலஜி, கிளினிகல் சைகாலஜி, அப்லைடு சைக்காலஜி, சைகோதெரபி என பல பல பெயர்களில் மாணவர்கள் மிக அதிக அளவில் சேர்ந்து பயிலும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
ஆனால், மன நல படிப்புகளுக்கு இதுவரை முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால், பல ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை கட்டணம் செலுத்தில் சில பல மாதங்கள் முதல் ஆண்டுகள் வரை வீணாக்கி, மாணவர்கள் பெறுவது வெறும் சான்றிதழ்கள்தான். அது தொடர்பான பணி வாய்ப்பு அல்ல. காரணம், மன நல நிபுணர்களுக்கான தகுதியாக,பெரிய பெரிய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை எதிர்பார்ப்பது சான்றிதழ்களை அல்ல.
Advertisement
Advertisement
கவுன்சிலிங் தருவது, மனநலனுக்கு சிகிச்சையளிப்பது போன்றவற்றை மாணவர்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மன நலப் படிப்புக்கும் நிபுணர்களிடம் பெறும் பயிற்சி அவசியமாகிறது.
எனவே, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மனநலன் சார்ந்த படிப்புகளை வழங்கும்போது, அதனை முடித்தால் மருத்துவமனைகள், மன நலன் காப்பகங்கள், சீர்திருத்தப் பள்ளிகளில் பயிற்சி பெறத் தகுதியானதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
அதுபோல, மனநலன் சார்ந்த படிப்புகளை வழங்கும் கல்வி நிலையங்களில் போதுமான பயிற்சி பெற்ற நிபுணர்கள் இருக்கிறார்களா? இவர்களுக்கு மன நல மருத்துவமனைகளுடன் ஒப்பந்தங்கள் உள்ளதா, அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியுமா? கல்வி நிறுவனம் கொடுக்கும் சான்றிதழ் அங்கீகாரம் பெற்றதா என்பதை தேடி ஆராய்ந்து தெளிந்த பிறகே இதுபோன்ற படிப்புகளில் சேர வேண்டும் என்பதே கல்வி நிபுணர்களின் கருத்தாகும்.