நீட்-2026 மறுதேர்வு வினாக்களும் கசிந்தனவா? சைபர் கிரைம் விசாரிப்பதாக என்டிஏ பதில்
நீட்-2026 மறுதேர்வு வினாக்கள் கசிந்திருப்பதாக வந்த புகார் குறித்து சைபர் கிரைம் விசாரிப்பதாக என்டிஏ பதில் அளித்திருப்பது பற்றி..
நீட்-2026 மறுதேர்வு வினாக்கள் கசிவதாக வந்திருக்கும் தகவல் குறித்து சைபர் குற்றப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக தனிநபர் அளித்த புகாருக்கு தேசிய தேர்வு முகமை பதிலளித்துள்ளது.
என்டிஏ மற்றும் சைபர் டோஸ்ட் என்ற இரண்டு எக்ஸ் பக்கங்களையும் டேக் செய்து, பிரின்ஸ் ஸ்ரீவஸ்தவா என்பவர் பதிவிட்டிருந்தார்.
அதில், எனக்கு ஒரே நபர் பயன்படுத்தும் சில டெலிகிராம் பக்கங்களின் லிங்குகள் கிடைத்தன. அந்த டெலிகிராம் பக்கத்தில் நீட்-2026 மறுதேர்வுக்கான வினாக்கள் வெளியிடப்படுவதாக அறிவிப்புகள் வந்துள்ளன. தயவு கூர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
Advertisement
Advertisement
இந்த பதிவுக்கு தேசிய தேர்வு முகமை பதிலளித்துள்ளது. அதாவது, இது குறித்து சைபர் குற்றப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 2026 நீட் இளநிலைத் தேர்வின் வினாத்தாள்கள் கசிந்ததாக எழுந்த புகாரில், தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறவிருக்கிறது. வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரித்த வருகிறது. இதில், வினாத்தாளை தயாரித்த குழுவில் இருந்த பேராசிரியர்களே, வினாக்களை, பணம் பெற்றுக் கொண்டு கசிய விட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பேராசிரியர்கள் பல ஆண்டு காலமாக வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் என்பதுதான் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் தேர்வு மையங்களில் 22 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதவிருக்கிறார்கள்.
நீட் தேர்வு தொடங்கியதிலிருந்தே, தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் தேசிய தேர்வு முகமை குறித்து அதிருப்தி வெளியாகி வரும் அதே நேரத்தில், வினாத்தாள் கசிவும் ஆண்டுதோறும் தொடர்கதையாகி வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.