நீட் மறுதேர்வு அறிவிப்பால் பொறியியல் கலந்தாய்வு தாமதமாக வாய்ப்பு!
நீட் மறுதேர்வால் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தாமதமாக வாய்ப்புள்ளது பற்றி...
நீட் மறுதேர்வால் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தாமதமாக வாய்ப்புள்ளது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டது. நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழிப் பதிவு, கட்டணம் செலுத்துதல், விருப்பத் தேர்வு, இட ஒதுக்கீடு மற்றும் இறுதி உறுதிப்படுத்தல் ஆகியவை டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், கடந்த மே 3 ஆம் தேதி முதல் விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கி, ஜூன் 5 ஆம் தேதியுடன் அதனை நிறைவு செய்தது.
அதன்படி, 3.02 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 2,45,220 பேர் தங்களது சான்றிதழ்களைப் பதிவேற்றியுள்ளனர். மேலும், சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அட்டவணைப்படி, வரும் ஜூன் 29 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், நீட் மறுதேர்வு நடைபெற உள்ளதால் பொறியியல் கலந்தாய்வு தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், ”பொறியியல் கலந்தாய்வை ஒத்திவைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து ஓரிரு நாள்களில் முடிவு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.