முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின்

ஈரோட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிரசாரம் பற்றி...

Updated On : 2 ஏப்ரல், 2026 at 5:17 AM
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் - X / DMK
பகிர்:

அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலை திண்டல் அருகே அமைக்கப்பட்டுள்ள திடலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

“குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை உள்ளிட்டவற்றைக்கு தீர்வு காண பாலின வள மையங்களை உருவாக்கியுள்ளோம். சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளோம். 86 சதவிகித வழக்குகளில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம். இந்தியாவிலேயே அதிக பெண்கள் வேலைக்கு போகும் மாநிலம் தமிழ்நாடுதான். சட்டம் - ஒழுங்கு இருப்பதால்தான் பெண்கள் வேலைக்கு போகிறார்கள்.

பாஜகவின் கிளைச் செயலாளராக இருக்கும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கண்டு வயிறு எரிகிறது. கால்களில் தவழ்ந்து சென்று, கால்களை வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தோம். ஆனால், திமுகவும் ஸ்டாலினும் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற விடுவதில்லை என நினைத்துக் கொண்டுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா? அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே தெரியும். அப்பாவி பெண்களின் கதறல்கள் இன்னும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் எவ்வளவு நாடகம் நடத்தினார் பழனிசாமி. அந்த வழக்கை முறையாக நடத்தி, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்தது திமுக ஆட்சிதான்.

அவர் ஆட்சியில் டிஜிபியாக இருந்தவர் பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதை பாதுகாத்தது அன்றைய முதல்வர் பழனிசாமிதான். இந்த வழக்கிலும் தண்டனை வாங்கிக் கொடுத்தது திமுக ஆட்சியில்தான்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும், அதிமுக ஆட்சிக்கும் பெரிய வரலாறே உள்ளது. தருமபுரி பேருந்தில் மாணவிகள் எரிக்கப்பட்டது, பெண் ஐஏஎஸ் மீது ஆசிட் வீச்சு என பெரிய பட்டியலே போடலாம். ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டத்தை திமுக இயற்றியுள்ளது” என்றார்.

summary

Pollachi itself stands as a witness to the atrocious rule of the AIADMK! — Chief Minister Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.