விருப்ப மனுவுக்கு ரூ. 50,000! கமலிடம் பணத்தை திருப்பிக் கேட்கும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்!!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து மக்கள் நீதி மய்யம் விலகியதைத் தொடர்ந்து விருப்ப மனுக்காக ரூ. 50,000-ஐ திருப்பிக் கொடுக்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து மக்கள் நீதி மய்யம் விலகியதைத் தொடர்ந்து விருப்ப மனுக்காக ரூ. 50,000-ஐ திருப்பிக் கொடுக்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன.
தொகுதிப் பங்கீட்டுக்கு முன்னதாக, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலர் உள்பட நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு உருவாக்கப்பட்டு, மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டது. அதில், ஒரு விருப்ப மனுவுக்கு கட்டணமாக ரூ.50,000 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்த நிர்வாகிகள், நேர்காணலுக்கு அழைப்பார்கள் என காத்திருந்திருந்தனர். ஆனால், திடீரென மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியில்லை என்றும் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகவும் மார்ச் 23 ஆம் தேதி கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். இதனால், விருப்ப மனு அளித்தவர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில், கமல்ஹாசன் தேர்தலில் இருந்து விலகியதால், போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிர்வாகிகள், தங்களின் விருப்ப மனுக்கான ரூ. 50,000-ஐ திருப்பித் தர வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் உள்பட பல கட்சிகள் ரூ. 10,000 முதல் ரூ. 20,000 வரை விருப்ப மனு கட்டணம் நிர்ணயித்திருந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் ரூ. 50,000 ஆக நிர்ணயம் செய்திருந்தது.
தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், தேர்தலில் போட்டியிடுவதால் சீட் கிடைக்கும் என நம்பி இதுவரை 50 முதல் 60 பேர் வரை பணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுள்ளனர். இதனிடையே, மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடாததால், விருப்ப மனுக்கான தொகை திருப்பித்தர வேண்டும் என விண்ணப்பித்த வேட்பாளர்கள் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.