மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை பற்றி...
சிறுபான்மையினர் சிறப்பு சட்டம், ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டம் இயற்ற போராடுவோம் என்று விசிக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள விசிக அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு மரியாதை செலுத்திய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
Advertisement
அதில், இருமொழிக் கொள்கை, கடலும் காடும் கனிமமும் நமதே, விலையில்லா கல்வியைப் பெறுவோம், மருத்துவத்தை அடிப்படை உரிமையாக்குவோம், மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பெறுவோம், மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு, தனியார் நிறுவனங்களில் சமூக நீதியை வென்றெடுப்போம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
மேலும், உழுபவருக்கு நிலம், இருப்பவருக்கு இடம் என்னும் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம், சிறுபான்மையினரைக் காத்திட சிறப்பு சட்டம் இயற்ற போராடுவோம், காவல்துறை மற்றும் சிறைத்துறையை சீர்திருத்த பாடுபடுவோம், மது மற்றும் போதைப் பொருள்களை ஒழிப்பதற்கு பிரசாரம் மேற்கொள்வோம், ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற பாடுபடுவோம் ஆகிய 15 கருப்பொருள்களின் கீழ் அறிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.