மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!
மறுவரையறை மசோதா தோல்வியடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதைப் பற்றி...
மத்திய அரசு தாக்கல் செய்த மறுவரையறை மசோதா தோல்வியடைந்த நிலையில், திண்டுக்கலில் பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
மக்களவை மற்றும் பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை 2029 ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏற்றவகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கும் மத்தியில் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா உள்ளிட்டவைகளுக்கான வாக்கெடுப்பு இன்று (ஏப்.17) மாலை நடைபெற்றது. இதில், மொத்தமாக 489 மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
இந்தச் சிறப்புக் கூட்டத்தொடரில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 528 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். மசோதாவிற்கு ஆதரவாக 298 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், 230 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர்.
மத்திய பாஜக அரசு, மக்களவையில் தாக்கல் செய்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற மூன்றில் இரண்டு பங்கான 352 வாக்குகள் தேவை என்ற நிலையில், 298 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால், இந்த மசோதா தோல்வியடைந்தது.
மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததற்கு எதிர்க்கட்சித் தரப்பில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களைப் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், மசோதா தோல்வியடைந்ததையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தேர்தலுக்கு முன்பே மண்ணைக் கவ்விய தேசிய ஜனநாயகக் கூட்டணி! தொகுதி மறுவரையறை கருப்புச் சட்டத்தை எதிர்த்துக் கருஞ்சட்டையோடு ஆண்டிப்பட்டியில் மேடையேறினேன்.
வெற்றிச் செய்தி வந்ததும், மீண்டும் வெள்ளுடைக்கு மாறி, வெடியைப் போட்டுவிட்டு திண்டுக்கல் கூட்டத்தில் மக்கள் ஆர்ப்பரிக்க மேடையேறினேன். தேனியும், திண்டுக்கல்லும் வழங்கும் திடமான வெற்றியோடு, மே-4 ஏழாவது முறையாகக் கழகம் மீண்டும் ஆட்சிக்கட்டில் ஏறும்!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Following the defeat of the delimitation bill tabled by the Central Government, Chief Minister Stalin—who is currently campaigning in Dindigul—celebrated by bursting firecrackers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.