முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை!
முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை செய்தது பற்றி...
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்ற பிரசார வாகனத்தை நிறுத்தி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
திருவாரூரில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சாவூர் சென்ற முதல்வர், அங்கிருந்து பிரசார வாகனத்தில் சாலை வழியாக பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், தஞ்சாவூர் அடுத்த சாலியமங்கலம் அருகே முதல்வர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்தபோது அவரின் வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனைக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள அஞ்சுகம் அம்மையார் நினைவகத்தில் மரியாதை செலுத்தினார்.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்காக முதல்வர் இன்று வாக்கு சேகரிக்கவுள்ளார்.
இன்று மாலை 5 மணியளவில் திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றவுள்ளார்.
முன்னதாக, கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டம் கல்வார்பட்டி சோதனைச் சாவடி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் காரை நிறுத்தி பறக்கும் படை சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.