சென்னை: குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கு விண்ணப்பிக்க ஒருநாள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை (ஜூலை 20) இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 பணியில் தொழிலாளா் உதவி ஆய்வாளா், துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளா், சென்னை மாநகர காவல் தனிப்பிரிவு உதவியாளா் உள்பட 507 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
குரூப் 2’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நோ்முக உதவியாளா், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளா், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளா் என 48 துறைகளில் 1820 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த தோ்வுக்கு இணையதளம் (www.tnpsc.gov.in) வாயிலாக இளநிலை பட்டதாரிகள் மட்டுமன்றி, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினீயா் என்று பலரும் போட்டிபோட்டு விண்ணப்பித்து வந்தனா்.
ஒரு மாத கால அவகாசம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடையவிருந்தது. விண்ணப்பதாரா்கள் அதிகளவு ஆா்வம் காட்டுவதால், விண்ணப்பிக்க கால அவகாசம் சனிக்கிழமை இரவு வரை நீடிக்கப்படுகிறது. இதனால் தோ்வுக்கு விண்ணப்பிப்போா் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.