29.8.1976: அரசியல் சாஸன திருத்த மசோதா அடுத்த வாரம் பார்லிமெண்டில் வரலாம்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
புது டில்லி, ஆக, 28 - அரசியலமைப்பு திருத்தங்கள் அடங்கிய மசோதாவை சர்க்கார் அடுத்த வாரம் பார்லிமெண்டில் கொண்டு வரலாம். பார்லிமெண்ட் கூட்டத் தொடர் செப்டம்பர் 1-ல் முடிவடைவதால். மசோதாவைப் பரிசீலிக்க பார்லிமெண்டுக்கு போதுமான அவகாசம் இல்லாதிருக்கலாம். எனவே அக்டோபரில் கூட்டப்படும் சிறப்புக் கூட்டத் தொடரின்போது பார்லிமெண்ட் இம் மசோதாவை விரிவாக ஆராயும்.
சர்க்காரின் அரசியல் சாஸனத் திருத்த மசோதா சுவரண் சிங் கமிட்டி அறிக்கையையும், மத்ய மந்திரி சபை நடத்திய விவாதங்களையும் பெரிதும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. எனினும்,லோக சபையின் ஆயுளை 5 வருடத்துக்கு மேல் நீடிக்கும் முயற்சி பார்லிமெண்டரி காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறது.
லோகசபையின் ஆயுளை 6 வருடங்களாக உயர்த்தும் பிரேரணை ஒன்றை கடந்த புதனன்று கட்சி நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆர். எல். பாடியா தெரிவித்தார். லோகசபை ஆயுள் 7 வருடங்களாக இருக்க வேண்டும் என்று சில முக்கிய காங்கிரஸ் உறுப்பினர்கள் விரும்புகின்றனர்.
Advertisement
Advertisement
இப்பிரேரணை மீது சர்க்காரின் முடிவு அடுத்த வாரம் பார்லிமெண்டில் அரசியல் அமைப்புத் திருத்த மசோதாவை கொண்டு வரும்போது தெரியும்.
தற்போதைய லோகசபையின் ஆயுள் கடந்த மார்ச்சுடன் முடிந்திருக்க வேண்டும். ஆனால் பார்லிமெண்டினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றின் மூலம் லோகசபை ஆயுள் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டது. லோகசபை ஆயுளை நீடிப்பதற்கு ஆதரவாகக் கூறப்படும் ஒரு வாதம் ராஜ்ய சபை மெம்பர்கள் 6 வருட காலம் பதவி வகிப்பதாகும்.
சில புது புகார்கள் விசாரணை வரம்புக்கு சம்பந்தமற்றவை: சர்க்காரியா கமிஷன் உத்தரவு
புது டில்லி, ஆக. 28 - புகார் மனு கொடுத்த கல்யாணசுந்தரத்தின் பிரமாண வாக்குமூலத்திலிருந்து சில பாராக்களை நீக்க வேண்டும் என்று கோரி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் மந்திரி எஸ்.பி. ஆதித்தனார் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஒத்திவைத்திருந்த தனது உத்தரவை சர்க்காரியா கமீஷன் இன்று அறிவித்தது.
எம். கல்யாணசுந்தரத்தின் பிரமாண வாக்குமூலத்தில் புது புகார்கள் அடங்கி உள்ளன என்றும், சர்க்காரியா கமிஷனின் விசாரணை வரம்புக்கு அந்தப் புது புகார்கள் அப்பாற்பட்டவை என்றும், எனவே பிராமாண வாக்குமூலத்திலிருந்து சில பாராக்களை நீக்க வேண்டும் என்றும் கருணாநிதி ஆதித்தனார் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கோரின.
ஆட்சேபிக்கப்பட்ட சில பாராக்கள் பற்றிய தனது உத்தரவை சர்க்காரியா கமிஷன் ஆகஸ்ட் 25-ந் தேதியன்று அறிவித்தது. ஆட்சேபிக்கப்பட்ட இதர சில பாராக்கள் பற்றிய தனது உத்தரவை கமிஷன் ஒத்திவைத்திருந்தது.
கல்யாணசுந்தரம் தமது பிரமாண வாக்குமூலத்தில் தற்போது எடுத்துரைக்க முற்பட்டுள்ள விவகாரம், சர்க்காரியா கமிஷனை நியமித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் உள்ள புகாரில் குறிப்பிட்டதிலிருந்து முற்றிலும் வேறானது என்று சர்க்காரியா கமிஷன் இன்று தனது உத்தரவில் கூறியது. ...
29.8.1976: The Constitution Amendment Bill may come up in Parliament next week.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.