முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

9.2.1976: நெல்லையை வாட்டும் பொல்லாத வறட்சி

நெல்லையை வாட்டும் பொல்லாத வறட்சி பற்றி...

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 10:38 PM
9.2.1976
பகிர்:

[நமது நெல்லை நிருபரிடமிருந்து]

திருநெல்வேலி மாவட்டத்தில் 1976 பிசானம் போகத்தில் நெல் பயிர் நிலவரம் கவலை தருவதாகவே இருக்கிறது (பிசானம் என்பது மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் அறுவடையாகும் நெல்லைக் குறிக்கும்.)

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தில் இப்போதைய பிசானம் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

இதில் தாமிரபரணி பாசனத் திட்டத்தின் கீழ் 86107 ஏக்கர் நிலமும் அடக்கம். மீதி நிலங்கள் கடனை ஆயக்கட்டிலும், களக்காடு, தென்காசியில் சில பகுதிகளிலும், ராமநதி ஆயக்கட்டின் கீழ் ஒரு பகுதியிலும் வருகின்றன. சென்ற ஆண்டில் (1975) பிசானம் நெல் ஏறக்குறைய இதே அளவு நிலத்தில் பயிராகியது. "கண்டு முதலும்" மாமூல் பிரகாரம் இருந்தது. இந்த ஆண்டிலும் மாமூல் மகசூல் கிடைக்குமென்று விவசாயத் துறை அலுவலர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நெல்லை மாவட்ட விவசாயிகள் அவ்வாறு எதிர்பார்க்கவில்லை.

வான் பொய்த்தது வறட்சியும் நீடித்தது

வட கிழக்குப் பருவமழை அடியோடு பொய்த்து விட்டது; சேர்ந்தாற் போல் மூன்றாவது ஆண்டாக வறட்சியும் வந்தது; இவை நாசம் செய்து விட்டன. பாபநாசம் நீர்த் தேக்கத்தில் இப்போதைய நீர்மட்டம் 8.20 மீட்டர். மணிமுத்தாறு தேக்கத்தில் 21.88 மீட்டர். "முறை-ஏற்பாட்டின்" கீழ், உள்ள தண்ணீர் 11 வாய்க்கால்களிலும் விடப்படுகின்றது. பயிர்களைக் காப்பாற்ற மணிமுத்தாறு தேக்கத்திலுள்ள பூரா தண்ணிரையும் விடுவதாக ஜில்லா கலெக்டர் திரு.கே. மாதவ சர்மா வாக்களித்திருக்கிறார்.

நாள்தோறும் பாசனத்துக்கு ஓராயிரம் கியூசெக்ஸ் தண்ணீர் கிடைக்கிறது. பெரும்பான்மை பயிர்களுக்கு கதிர் முற்றுவதற்குள் குறைந்தபட்சம் இரண்டு தடவையாவது தண்ணீர் கட்ட வேண்டும்.

மார்ச் 8 பார்லி. பட்ஜெட் கூட்டம் ஆரம்பமாகலாம்

புதுடில்லி, பிப். 8 - பார்லிமெண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் 8 (ஆம் தேதி) ஆரபமாகும் என்று இப்போதைய அறிகுறிகளிலிருந்து தெரிகிறது.

நிதி மந்திரி சி. சுப்ரமண்யம் பட்ஜெட் தயாரிப்புக்குப் பூர்வாங்கமாக நிதி அமைச்சகத்தின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை கலந்தார். வார இறுதியில் கடைசியாக ஆலோசனை நடத்தினார். இதில் துணை நிதி மந்திரி பிரணவ குமார் முக்கர்ஜி கலந்து கொண்டார். உடல் நலத்துக்காக பம்பாயில் இருந்து வரும் சுப்ரமண்யம் உயரதிகாரிகளுடன் அங்கேயே பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்வார ஆரம்பத்தில் அவர் தலைநகருக்குத் திரும்புவாரென்று எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டக் கமிஷனும் 1976-77க் கான திட்டம் பற்றி மத்திய அமைச்சகங்களுடனும், ஏறக் குறைய எல்லா மாநிலங்களுட னும் ஆலோசனை கலந்தாகிவிட்டது.

summary

9.2.1976: The terrible drought that is plaguing Nellai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.