13.7.1976: பாகிஸ்தானுக்கு முதல் ரயில் வண்டி: 22-ந்தேதி பயணமாகும்
11 வருட கால இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தானிலுள்ள லாகூருக்குச் செல்லும் ரயில் பற்றி...
புதுடில்லி, ஜூலை 12 - இந்தியாவிலிருந்து 11 வருட கால இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தானிலுள்ள லாகூர் நகருக்கு முதலாவது ரயில் வண்டி பல நூறு பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு வருகிற 22-ந் தேதி காலை சுமார் 9 மணிக்கு கிளம்பும்.
அந்த வண்டிக்கு அமிருதசரஸ் - லாகூர் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்திக் கொள்வதென்று சமீபத்தில் ஏற்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து முதலாவது ரயில் வண்டி அன்றைய தினம் விடப்படுகிறது.
Advertisement
Advertisement
லாகூர் சேர்ந்த பிறகு அதே வண்டி பிற்பகல் 2-45 மணிக்கு கிளம்பி மாலை 6-30 மணிக்கு அமிருதசரஸ் வந்து சேரும்.
தினசரி ரயில்கள் சர்வீஸ் இதே நேரப்படி விடப்படும்.
இந்த ரயில் வண்டியில் முதலாவது, இரண்டாவது வகுப்புகள் இருக்கும்.
லாகூர் செல்லும் பிரபாணிகள் இந்திய கரன்சியைக் கொடுத்து இந்திய எல்லையிலான அட்டாரி வரை டிக்கெட் வாங்குவர். லாகூர் போய்ச் சேர்ந்த பிறகு அட்டாரியிலிருந்து லாகூர்வரையிலான கட்டணத்தை அங்கு அளிப்பர்.
வழியில் அட்டாரி ரயில் நிலையத்தில் சுங்க, உடல்ஆரோக்கிய சோதனைகள் நடைபெறும்.
இருநாடுகளுக்கிடையே மேற்படி தினத்தில் சரக்கு, பார்சல் போக்குவரத்தும் துவங்கும்.
செவ்வாயில் ஜலம், உயிரினம் இருப்பதாக விஞ்ஞானி கருத்து
பாஸடேனா, (யு. எஸ்.) ஜூலை. 11- "வைகிங்" விண்வெளிக் கலம் இறங்குவதற்கு ஏற்ற செவ்வாய் கிரகத்தின் பெரும் பகுதி சந்திரன் போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதாக இன்று விஞ்ஞானிகள் கூறினார்கள். ஆகவே, வைகிங் விஞ்ஞான ஆய்வுக்கூடம் அங்கு பத்திரமாக இறங்க முடியும்.
சந்திரன் போன்ற தரையில் இறங்குவதற்கு வைகிங் ஏற்றது என்று திட்ட நிர்வாகி ஜிம் மார்டின் கூறினார்.
அது இறங்கும் இடம் பற்றி புதன்கிழமை முடிவு செய்யப்படும்.
செவ்வாய் காற்று மண்டலத்தில் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவு ஈரப்பசை காணப்பட்டது. வாயு மண்டலத்தில் ஜலம் காணப்பட்டதால். செவ்வாயில் ஏதாவது உயிர் இருக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர்.
வைகிங்-1 செவ்வாயை சுற்றிக் கொண்டிருக்கிறது. வைகிங்-2 செவ்வாயை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது ஆகஸ்ட் 3ம் தேதி அந்த கிரகத்தை அடையும்.
First train to Pakistan: Departs on the 22nd.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.