16.7.1976: பாலி தீவில் பூகம்பம்: ஒரு நகரமே தரைமட்டமாகியது
பாலி தீவில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஒரு நகரமே தரைமட்டமானது பற்றி...
ஜாகர்த்தா, ஜூலை. 15 - இந்தோனேஷியாவில் பாலித் தீவில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தில் 50க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். ஒரு சிறிய டவுன் தரைமட்டமாகியது. பூகம்பத்தால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது என்று பாலித் தீவு அதிகாரிகள் கூறினர்.
சுமார் 40 ஆயிரம் ஜனத்தொகை கொண்ட செலிரிட் என்னும் டவுன்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த டவுனில் அநேகமாக எல்லா கட்டடங்களும், பாலங்களும் தகர்ந்தன. கட்டடங்களும், வீடுகளும் விளையாட்டுப் பொம்மைகள் போல விழுந்தன என்று அதிகாரிகள் கூறினர்.
நேற்றிரவு புதிதாக நிலநடுக்கம் ஏற்பட்டதன் விளைவாக சாவு தொகை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
Advertisement
Advertisement
கிழக்கு ஜாவாவில் உள்ள சுபொயாவிலும், லேசான பூகம்பம் ஏற்பட்டது. அங்கு பல கட்டடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டன. ஆனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பாலியில் ஜெம்பாரனா என்னுமிடத்தில் மக்கள் மேலும் பூகம்பம் ஏற்படலாமென அஞ்சி கால் பந்தாட்ட மைதானத்தில் இரவுப் பொழுதைக் கழித்தனர். இந் நகரில் குறைந்தபட்சம் 7 பேர் உயிரிந்தனர்.
தாபானான் என்னுமிடத்தில் 8 அடுக்கு கோபுரம் கொண்ட இந்து கோயில் பூகம்பத்தால் சேதமடைந்தது.
இந்தோனேஷியாவில் மேற்கு நியூகினி பகுதியில் கடந்த மாதக் கடைசியில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காமராஜின் 74 வது பிறந்த தின விழா - கிண்டி நினைவகத்திலும், தி. நகர் வீட்டிலும் தலைவர்கள் அஞ்சலி
சென்னை, ஜூலை. 15 - காமராஜின் 74-வது பிறந்த தினம் இன்று தமிழகமெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கிண்டியிலுள்ள அன்னாரின் நினைவகத்திற்கும், தி.நகரிலுள்ள வீட்டுக்கும் மத்திய மந்திரிகள் உள்பட காங்கிரஸ் தலைவர்களும், ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களும் சென்று அஞ்சலி செலுத்தினர். கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டது.
மறைந்த தேசியத் தலைவர் காமராஜ் நினைவுத் தபால் தலை அவரது 74வது பிறந்த நாளான இன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
கலைவாணர் அரங்கத்தில் இந்திய தபால் தந்தி இலாகா நடத்திய இவ்விழாவில் மறைந்த பெருந் தலைவருக்கு புகழஞ்சலிகள் செலுத்தப்பட்டன.
பாரதத்தின் முக்கியமான செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர்களின் ஒருவர் காமராஜ் என தபால் தலையை வெளியிட்டுப் பேசிய மத்திய தகவல் தொடர்புத் துறை துணை அமைச்சர் ஜகந்நாத் பஹாடியா கூறினார். நமக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிற ஒரு நேரத்தில், அவரை நாம் இழந்துவிட்டோம் என்றார். ...
16.7.1976: Earthquake in Bali: An entire town razed to the ground.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.