5.6.1976: இலவசக் கல்வி குறித்து த.நா. அரசு மறுபரிசீலனை
இலவசக் கல்வி குறித்து த.நா. அரசு மறுபரிசீலனை செய்வது பற்றி...
மதுரை, ஜூன். 4 - தமிழ் நாட்டில் இலவசக் கல்வி ஏற்பாடு முழுவதையும் மாநில அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது என்று கவர்னர் கே. கே. ஷா இன்று திண்டுக்கல்லில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
பொருளாதார ரீதியில் ஏழைகளாகவும், திறமைசாலிகளாகவும் உள்ள மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிப்பதையும், பண வசதி படைத்தவர்கள் கல்விக்காகச் செலவிடுவதையும் ஷா ஆதரித்தார். வசதி படைத்தவர்கள் இலவசக் கல்வி ஏற்பாட்டைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காமல், தகுதி படைத்தவர்களுக்கு மட்டும் உதவ முடியுமா என்பதை சர்க்கார் ஆராய்ந்து வருவதாக கவர்னர் தெரிவித்தார். இதுசம்பந்தமாக எந்தத் தரப்பிலிருந்து ஆலோசனைகள் வந்தாலும் அவற்றைப் பரிசீலிப்பதாக அவர் கூறினார்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு 100 சதவிகித மான்யம் தரவேண்டும் என்ற மதுரை சர்வ கலாசாலைப் பகுதியிலுள்ள கல்லூரி பிரின்சிபால்களின் கோரிக்கையை ஒரு நிருபர் கவர்னரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். இடைக்கால நிவாரணம் ஏதாவது அளிக்க முடியுமா அல்லது இப்பிரச்னை முழுவதையும் அடுத்துவரும் மந்திரி சபைக்கு விட்டுவிடலாமா என்பதைத் தாம் பரிசீலித்து வருவதாக கவர்னர் கூறினார்.
Advertisement
Advertisement
தற்போது கல்லூரிகளுக்குத் தரப்படும் 80 சதவிகித மான்ய உதவியிலிருந்து கல்லூரி ஆசிரியர்களுக்கு நேரடியாக சம்பளத்தை அனுப்ப முடியுமா என்பதையும் சர்க்கார் பரிசீலித்து வருவதாக கவர்னர் தெரிவிக்கார்.
சென்ட்ரல் ரயில் நிலைய வருவாய் அதிகரிப்பு
சென்னை, ஜூன். 4 - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது போலவே, அவர்களை வழியனுப்ப வருகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று சென்ட்ரல் ரயில்வே நிலைய சூப்பரிண்டெண்ட் டி. ஓ. ரொசாரியோ இன்று இங்கு நிருபர்களிடம் கூறினார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வருமானம் எப்பொழுதும் இல்லாத வகையில் கடந்த மே மாதம் ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தும் வகையில் உயர்ந்திருக்கின்றது. மே மாதத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பல்வேறு இனங்களில் கிடைத்த வருவாய் ரூ. 1.33 கோடியாகும். கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ. 1.19 கோடி மட்டுமே வருமானமாக கிடைத்தது என்று தென் ரயில்வேயின் பிரதம வணிகத்துறை சூப்பரிண்டெண்ட் சி. லி. பி. மேனன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குக் கிடைத்த வருமானம் ரூ. 1.01 கோடி. மே மாதத்தில் மொத்தம் நான்கு லட்சத்து 42 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. டிக்கெட்டுகளின் விற்பனை மூலம் கிடைத்த வருமானம் ரூ. 99.53 லட்சம். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 3.87 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆயிற்று. அதன் மூலம் கிடைத்த தொகை ரூ. 81.55 லட்சமாகும். இதே போன்று டிக்கெட்டுகளின் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதம் ரூ.95 ஆயிரத்திற்கு விற்ற பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் விற்பனை மே மாதத்தில் ரூ.1.21 லட்சத்திற்கு உயர்ந்துள்ளது. ரயில்வே இலாகா நடத்தும் உணவு விடுதிகள் மூலம் மே மாதம் ரூ. 5.52 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் அவற்றில் ரூ. 3.62 லட்சத்திற்கு மட்டுமே விற்பனையாகியிருந்தன. ...