முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

10.6.1976: கல்லூரிகளில் அட்மிஷன் நெரிசல் இல்லை - பாலிடெக்னிக்குகளில் சேர மாணவர்கள் ஆர்வம்

பாலிடெக்னிக்குகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவது பற்றி...

Updated On : 10 ஜூன் 2026, 4:01 am IST
10.6.1976 - Dinamani
பகிர்:

வெளியூர் கல்லூரிகளில் பி.யு.ஸி-க்கு, அட்மிஷன் நெரிசல் இல்லை - ஆனால் பாலிடெக்னிக்குகளில் சேர மாணவர்கள் ஆர்வம்

திருச்சி, ஜூன். 9 - வெளியூர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் குறிப்பாக, அரசினர் கல்லூரிகளில் இந்த வருஷம் புகுமுக வகுப்புகளில் அட்மிஷன் நெரிசலே இல்லை. எனவே இக்கல்லூரிகளில் பி.யு.ஸி. வகுப்புகள் அட்மிஷனுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களைப் பூர்த்தி செய்வதே கஷ்டம் எனத் தோன்றுகிறது.

இந்தக் கல்வியாண்டில் புது கல்லூரிகளைத் திறப்பதில்லை என்று சர்க்கார் முடிவு எடுத்துள்ள போதிலும்கூட இந்த நிலைமை காணப்படுகிறது.

Advertisement

Advertisement

திருச்சி மாவட்டத்தில் இரு மகளிர் கல்லூரிகள் உள்பட 13 கல்லூரிகள் உள்ளன. திருச்சி நகரில் உள்ள 3 ஆண்கள் தனியார் கல்லூரிகளிலும், இரு மகளிர் கல்லூரிகளிலும் மட்டுமே பி.யு.ஸி. வகுப்புகளுக்கு அட்மிஷன் நெரிசல் காணப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள இதர கலைக் கல்லூரிகளில் பி.யு.ஸி. அட்மிஷனுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. எஸ்.எஸ்.எல்.ஸி. பாஸ் செய்து விண்ணப்பம் செய்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் இக்கல்லூரிகளில் இடம் கிடைப்பது கஷ்டம்.

ஆனால் இம்மாவட்டத்தில் உள்ள இரு பாலிடெக்னிக்குகளிலும் மற்றும் இதர - தொழில் பயிற்சி ஸ்தாபனங்களிலும் சேருவதற்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், பாலிடெக்னிக்கில் ஒவ்வொரு ஸீட்டுக்கும் சராசரி 7, 8 விண்ணப்பங்கள் வரை கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரிட்டனில் இனப்பூசல்: இந்தியா, வங்கதேச, பாக். தூதரகங்கள் கூட்டறிக்கை

புதுடில்லி, ஜூன், 9 - பிரிட்டனில் இனவெறி உணர்வுகளைத் தூண்டக் கூடிய விதத்தில் எதையும் செய்யவோ சொல்லவோ வேண்டாம் என்று, பிரிட்டனில் உள்ள தமது பிரஜைகளுக்கு இந்திய, வங்கதேச, பாகிஸ்தான் தூதரகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பிரிட்டனில் சட்டம், ஒழுங்கினை நிலை நாட்டுவதில் உள்ளூர் அதிகாரிகளுடன் முழு அளவில் ஒத்துழைக்கும்படியும் இவை கோரியுள்ளன.

லண்டனில் இந்தியாவின் உதவி ஹைகமிஷனர் கே. நட்வார்சிங், பாகிஸ்தான் தூதரக அதிகாரி இலாஹி பக்ஷ் சோம்ரூ, வங்கதேச தற்காலிக ஹைகமிஷனர் பரூக் அஹமத் சௌத்ரி ஆகிய மூவரும் இந்திய தூதரகக் கட்டிடத்தில் செவ்வாயன்று சந்தித்துப் பேசினர். சென்ற மாதக் கடைசியில், பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் நடந்ததாகக் கூறப்படும் இனவெறி சம்பவங்கள் பற்றி அவர்கள் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தினர். அதன்பிறகு அவர்கள் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர்.

நிலைமையைத் தாங்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்துவருவதாகவும், மேலும் இனவெறியைத் தூண்டக் கூடிய எதையும் செய்ய வேண்டாம் என்றும் லண்டனில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச பிரஜைகளையும் இந்தியத் துணைக் கண்ட வமிசா வழியினரையும் கேட்டுக் கொள்வதாகவும் அந்த அறிக்கை கூறியது.

பிரிட்டனில் உள்ள இந்த நிலைமையைத் தொடர்ந்து கவனித்து பரிசீலிக்க தாங்கள் தொடர்ந்து அவ்வப்போது தொடர்பு கொள்வதாகவும் இந்தக் கூட்டறிக்கை குறிப்பிட்டது.

summary

No admission rush in colleges; students show interest in joining polytechnics.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.