13.6.1976: ஜெய்கார் கோட்டைக்குள் அக்பர் காலத்து தங்க, வைர புதையல்?
ஜெய்கார் கோட்டைக்குள் அக்பர் காலத்து தங்க, வைர புதையல்?
ஜெய்ப்பூர், ஜூன். 12 - வருமான வரி இலாகாவைச் சேர்ந்த மூத்த புலன் விசாரணை அதிகாரி ஒருவர் டில்லியிலிருந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறார். மறைந்து கிடக்கும் தங்கம், வைரம் முதலிய சொத்துக்களின் விவரங்களைப் பற்றிப் புலன் விசாரணை நடத்துவார்.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ராஜபுதானிய மன்னர்கள் நிறையத் தங்கத்தையும், நகைகளையும் பூமிக்கடியில் புதைத்து வைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அந்தத் தங்கத்தையும் வைரங்களையும் எடுப்பதற்காகப் பூமியைத் தோண்டும் முயற்சியில் வருமான வரி இலாகா ஈடுபடுமா என்பதற்கான அறிகுறி எதுவும் இன்னும் தெரியவில்லை.
அக்பரின் வைசிராயும் தளபதியும் ஆன ஜெய்சிங் ராஜ்காரில் இவ்வாறு புதைத்து வைத்த கருவூலத்தை எடுப்பதற்காக வருமான வரி அதிகாரிகள் பூமியைத் தோண்டிப் பார்த்தார்கள். ஆனால் விசேஷமாக எதுவும் அகப்பட்டவில்லை.
Advertisement
Advertisement
பயங்கரமான மீனா நாடோடி மலைவாசிகள் பரம்பரையாக ஜெய்காரைக் காத்து வந்தார்கள். இந்த நாடோடிகளில் ஒருவர் நூற்றுக்கணக்கான கோடி பெறுமான தங்கம், வைரம், வைடூரியம் கொண்ட பெரிய கருவூலம் ஜெய்கார் கோட்டைகளுக்குள்ளும் மற்ற இடங்களிலும் இன்னும் இருப்பதாக அரசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். இதற்கு ஆதாரமாகப் பழங்காலத் தோல்வரைபடம் ஒன்றை அவர் காண்பித்தார். இந்தத் தகவல் உண்மைதானா என்று பார்க்க வேண்டுமானால் மறுபடியும் ஆழமாகத் தோண்ட வேண்டும். தாம் குறிப்பிடும் இடத்தில் தோண்டினால் ஓர் ஆலயம் இருப்பதாகவும் அதிலிருந்து கருவூலம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறுகிறார்.
இனி பழைய ரூபாய் நோட்டுகளை அரசு பாங்குகளிலேயே மாற்றிக் கொள்ளலாம்
பம்பாய், ஜூன் 12- இரண்டாக கிழிந்த கரன்ஸி நோட்டுக்கள், அழுக்கு நோட்டுக்களை பொது மக்கள் இனி அரசு பாங்குகளிலேயே மாற்றிக் கொள்ளலாம் என்று இன்று ரிசர்வ் பாங்கு பத்திரிகை குறிப்பு அறிவிக்கிறது. பொது மக்கள், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக இந்த வசதி அளிக்க ரிசர்வ் பாங்கு, அரசு பாங்குகளுக்கு இந்த அதிகாரம் வழங்கியுள்ளது.
தபால் தந்தி இலாகா, ரயில்வே அலுவலகங்களும் பாக்கி வசூலில் அழுக்கு, இலேசாக கிழிந்த கரன்ஸி நோட்டுகளை வாங்கிக் கொள்ள அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.