31.5.1976: அரசுடமை பாங்குகளை 4 அல்லது 5 பாங்குகளாக இணைக்கத் திட்டம்
அரசுடமை பாங்குகளை 4 அல்லது 5 பாங்குகளாக இணைக்கும் திட்டம் பற்றி...
ஹைதராபாத், மே. 29 - அரசுடமையாக்கப்பட்ட 14 பாங்குகளையும் 4 அல்லது 5 அகில இந்திய பாங்குகளாக இணைப்பதற்கான திட்டம் ஒன்றை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அகில இந்திய ஸ்டேட் பாங்கு அதிகாரிகள் பெடரேஷனின் தலைவரான பி. கோட்டய்யா கூறியுள்ளார்.
ஒன்றிணைக்கப்பட்ட இந்தப் பாங்குகள் பம்பாய், கல்கத்தா, சென்னை, புதுடில்லி, பெங்களூர் ஆகிய நகரங்களில் தலைமையகத்தைப் பெற்றிருக்கும் என்றும், இவை ஒவ்வொன்றும் 2000 முதல் 3000 கிளைகளைக் கொண்டதாக இருக்குமென்றும் கோட்டய்யா ஓர் அறிக்கையில் கூறினார்.
ஸ்டேட் பாங்கின் 7 துணை பாங்குகள் ஹைதராபாத்தைத் தலைமையகமாகக்கொண்டு செயல்படகூடிய அகில இந்திய பாங்குடன் இணைக்கப்படும் என்றும் அவர் மேலும் சொன்னார். ஹைதராபாத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அகில இந்திய பாங்கின் நிர்வாகம் ஸ்டேட் பாங்கிடமிருந்து துண்டிக்கப்படும் என்றார் அவர்.
Advertisement
Advertisement
தற்போது நாட்டில் வர்த்தக பாங்குகளின் கிளைகள் 21,300 உள்ளன. இதில் ஸ்டேட் பாங்கின் கிளைகள் 3850. ஸ்டேட் பாங்கின் துணை அமைப்புகளாக உள்ள பாங்குகளின் கிளைகள் 1850. 14 அரசுடமை பாங்குகளின் கிளைகள் 11,600. தவிர, தனிப்பட்ட மற்றும் அன்னிய பாங்குகளின் கிளைகள் 4000 உள்ளன.
இந்தியாவில் சம்பாதிக்கும் 20 கோடி மக்களில் சுமார் 8 கோடி பாங்குகள் மக்களுக்கு வர்த்தக பாங்கு வசதிகளை அளித்து வருகின்றன என்று கோட்டய்யா தனது அறிக்கையில் கூறினார்.
இந்த வசதியை அடுத்த 3 ஆண்டுகளில் இரட்டிக்கத் திட்டம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்தில் மத்திய பாங்குத்துறை மந்திரி ஹைதராபாத்தில் பேசுகையில், அரசுடமையான பாங்குகள் செயல்படும் விதம் பற்றி ஆராய அரசு இரண்டாவது கமிஷனை அமைக்க உத்தேசித்துள்ளதாக அறிவித்தார்.