உணவே மருந்து

உங்கள் உணவில் சத்து உள்ளதா? ஆரோக்கிய வாழ்விற்கு இந்த 5 உணவை சாப்பிடுங்கள்!

தினமணி

சத்தான உணவுகள்  

நீங்கள் உண்ணும் உணவு உங்களுக்கு அதிக சக்தியையும் உடல் வலிமையும் தருவதாக இருந்தால் அதுவே சத்தான உணவாகும். தேன், பழங்கள், நட்ஸ், இளநீர், காய்கறி சாலட், பழரசம், நீராகாரம், மோர், பணியாரம், ஆவியில் வேக வைக்கப்பட்ட உணவு வகைகள் போன்றவை அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளாகும். எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வறுக்கப்படாத உணவுகளையும் இந்த வகையில் சேர்க்கலாம்.

பீட்ரூட், ஆப்பிள், கேரட், இஞ்சி, லெட்யூஸ் எனும் கீரை ஆகியவற்றை அரைத்து ஜூஸாக்கி ஒரு டம்ளர் குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் பி, சி மற்றும் கரோட்டின், ஆகிய சத்துகள் கிடைக்கும். இந்த ஜூஸை தினமும் ஒருவேளை குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். தேவையான ஊட்டச்சத்துகளும் உடனடியாகக் கிடைக்கும். 

குப்பை உணவுகள் 

நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இயற்கையாக உள்ள சத்துக்களை சமையல் முறைகளால் கெடுப்பதுடன் அதில் கூடுதலாக தேவையற்ற நச்சுக்களை சேர்த்து உண்ணுவது குப்பை உணவுகள். இந்த உணவு தயாரிக்கும் முறையால் உணவில் கெட்டக் கொழுப்பு சேர்ந்து உடல் ஆரோக்கியத்தை சீர் குலைத்துவிடும். ஜன்க் உணவுகள் அனைத்துமே இந்த வகையைச் சேரும். தவிர வீட்டில் செய்யப்பட்டும் வறுத்த உணவுகள், பொறித்த காய்கறிகள் இவையும் குப்பை உணவுகள்தான். பசிக்கு உணவு சமைக்க வேண்டும், மாறாக அதீத ருசிக்கு உணவு சமைக்கத் தொடங்கினால் அது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.

சமச்சீர் உணவுகள்  

சத்தான உணவுகளில் உடலுக்குத் தேவையான அளவு நல்ல கொழுப்பு சேர்ந்திருந்தால் அதனை சமச்சீர் உணவு என்கிறார்கள் ஊட்ட்ச சத்து நிபுணர்கள். செக்கு எண்ணெயில் தேவையான அளவுக்கு அந்த உணவு வேகும் அளவுக்கு நல்ல எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

சத்தான உணவுகள் நிறைய உள்ளன. அவற்றுள் முக்கியமான ஐந்து உணவுகள் இவை. 

கேழ்வரகு

பெண்களுக்கு கால்சியம் குறைபாடு 35 வயதிலிருந்தே ஏற்படத் தொடங்குகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு கேழ்வரகு ஒரு வரப்பிரசாதம். இதில் உள்ள கால்சியம் தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு பாலை அதிகரிக்கச் செய்யும். ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு மட்டுமின்றி கொலஸ்ட்ரால், சர்க்கரை வியாதியையும் கட்டுக்குள் வைக்க உதவும். நீண்ட நாள்களாக கால்சியம் குறைபாடு உள்ள பெண்கள் கேழ்வரகை உணவாக உட்கொள்வதன் மூலம் இழந்த சக்தியைத் திரும்பப் பெறலாம்.

பாதாம் பருப்பு

பாதாம் பருப்பில் மாங்கனீசியம், செம்பு போன்ற தாதுப்பொருள்கள் அடங்கிய பாதாம் பருப்பு எலும்புகளை வலுப்படுத்தி, கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கும். பாதாம் பருப்பில் பயோடின், வைட்டமின் பி12, இ ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன. வைட்டமின் இ சத்து அதிகம் காணப்படுவதால் இதய நோய்கள், புற்றுநோய், வயதானவர்களுக்கு வரும் அல்சைமர் நோய் ஆகியவற்றைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. பாதாமில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாகவும் காணப்படுகிறது. பாதாம் பருப்பு உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

அவ்வப்போது ஒரு கை நிறைய வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு மற்றும் பாதாம் பருப்பு எடுத்துச் சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படாது.

ஸ்பைரிலீனா (Spirulina)

இதில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்த தாவரம் ஸ்பைரிலீனா. அமேசான் காடுகளில் காணப்பட்ட இந்தத் தாவரம் தற்போது தமிழகத்திலேயே விளைவிக்கப்பட்டு, 'காப்ஸ்யூல்' வடிவத்தில் விற்பனையாகிறது. பி 12 சத்து குறைந்த பெண்களுக்கு பரிந்துரை செய்யப்படும் மிக சிறந்த உணவு இது. படபடப்பு, மன அழுத்தம், ரத்த சோகை, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணியாக விளங்குகிறது. இதில் அதிக அளவில் அமிலச் சத்து உள்ளதால், பெண்கள் கற்றாழைச் சாறுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல பயன் பெறலாம். உடல் எடை குறைக்க விரும்புவோர் இதனை தினமும் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறைவதுடன் ஆரோக்கியமும் மேம்படும்.

முருங்கைக் கீரை

முருங்கைக் கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் போன்றவை குணமாகும். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைக்கீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

  • முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை வராமல் தடுக்கலாம். தோல் நோய்களும் நீங்கும்.
  • ஆஸ்துமா, மார்புச் சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறு பிரச்னைகளுக்கு முருங்கைக் கீரை ரசம் அல்லது சூப் நல்ல பலன் தரும்.
  • முருங்கைக் கீரைச் சாப்பிடாதவர்கள் முருங்கை இலையை நிழலில் காய வைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்துச் சாப்பிடலாம்.
  • பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்யும். ரத்த உற்பத்தியைப் பெருக்கும் தன்மை கொண்டது முருங்கைக் கீரை.
  • முருங்கை இலைகளை உலர்த்திப் பொடி செய்து வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்னையின் போது ஒரு தேக்கரண்டி வாயிலிட்டு நீர் அருந்தினால் குணம் கிடைக்கும்.
  • முருங்கைப் பட்டையை இடித்து சாறாக்கி, இஞ்சி சாறுடன் வெந்நீரில் சிறிது உப்பு கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் அழிந்து, வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். நன்கு பசியெடுக்கும் உணவும் மருந்தும்.

கற்றாழை

பண்டைய நாள்களிலிருந்தே கல்லீரல் பிரச்னைகளுக்கு "அலோவேரா' எனப்படும் கற்றாழை ஜூஸ் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உடலில் அதிகமான அமிலம் சுரப்பதால் ஏற்படும் வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் போன்றவை குணமாக கற்றாழை ஜூஸ் உதவுவதோடு, வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. மோரில் சோற்றுக் கற்றாழையைப் போட்டுச் சாப்பிட்டால் கண் எரிச்சல் இருக்காது.

கற்றாழை மடலைக் கீறி உள்ளே இருக்கும் தசைப் பாகத்தை எடுத்து முகத்தில் பூசினால் முகம் மிருதுவாகும்; சுருக்கங்கள் மறையும். இந்த அதிசயத் தாவரம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைக்கவும், அதிகப்படியான கலோரிகளைக் குறைத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.

நன்றி : மகளிர்மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT